ரூ.5 கோடி பதுக்கியதாக தி.மு.க பிரமுகர் வீட்டில் ரெய்டு.. எதுவும் சிக்கலை..
ராமநாதபுரம்: ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் திமுக பிரமுகர் சுப்பிரமணியன் வீட்டில் ரூ5 கோடி பதுக்கப்பட்டிருப்பதாக பரபரப்பாக சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இந்த சோதனையில் எதுவுமே சிக்கவில்லை.
ராமநாதபுரம் தொகுதி தி.மு.க வேட்பாளர் முகமதுஜலீலுக்கு ஆதரவாக வாக்களிக்க, அறந்தாங்கி அக்ரஹாரம் பகுதியில் உள்ள தி.மு.க நகர்மன்ற கவுன்சிலரும், முன்னாள் மாவட்ட தி.மு.க தொண்டரணி துணை அமைப்பாளருமான முத்து என்ற சுப்பிரமணியன் வீட்டில் ரூ.5 கோடி பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு புகார் வந்தது.
இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் தேர்தல் நடத்தும் அலுவலரின் உத்தரவின்பேரில் தி.மு.க கவுன்சிலர் முத்து என்ற சுப்பிரமணியன் வீட்டில் அறந்தாங்கி வட்டாச்சியர் தவச்செல்வம், ராமநாதபுரம் தொகுதி நிலை கண்கானிப்பு குழு அலுவலர்ஜெயராஜ், பறக்கும்படை அலுவலர் முருகவேல், வருவாய்த்துறை அலுவலர்கள், காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
வீட்டில் உள்ள சமையறை, குளியலறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சோதனையிட்டதை தேர்தல் ஆணையம் பணி அமர்த்தியுள்ள 2 வீடியோ கேமராமேன்கள் படம் பிடித்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை. இதனால் சில மணி நேர பரபரப்பு சுவாரசியமின்றி ஓய்ந்தது.