கணவன், மனைவி சண்டையை தடுக்கப் போய் உயிரை இழந்த மூதாட்டி
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறை தடுத்த மூதாட்டி கீழே தள்ளி கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக அவரது பேத்தியின் கணவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே உள்ள பங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம், விவசாயி.
இவரது மனைவி உண்ணாமலை. இவரது மகள் ரமணியின் மகள் பவானி. இவரது கணவர் கோவிந்தராஜ். இவர் ஆலங்காயம் பகுதியில் இரும்பு கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
சில மாதங்களாக கோவிந்தராஜுக்கும், பவானிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தம்பதியிடையே பிரச்னை ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த பவானியின் பாட்டி உண்ணாமலை இருவரையும் சமாதானம் செய்துள்ளார்.
ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், உண்ணாமலையை பிடித்து கீழே தள்ளியதாக தெரிகிறது. இதில் படுகாயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்த அவர் இறந்துவிட்டார்.ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.