ஓணம் பண்டிகை: அத்தப்பூ கோலப்போட்டியில் பெண்கள் அசத்தல்
கோவை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நடைபெற்ற அத்தப்பூ கோலப் போட்டியில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
அண்டை மாநிலமான கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் வாழும் கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, சென்னையிலும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஓணம் பண்டிகையின் சிறப்பம்சமே பல வண்ண மலர்களைக் கொண்டு போடப்படும் ரங்கோலிதான். அத்தப்பூ கோலம் என்று இதனை அழைக்கின்றனர்.
வண்ண வண்ண பூக்களைக் கொண்டு வகை வகையாய் கோலமிட்டு விருந்தினர்களையும், ஆசிர்வதிக்க வரும் மகாபலி மன்னனையும் வரவேற்கின்றனர் மலையாள மக்கள்.
அத்தப்பூ என்ற பூவைப் பறித்து பூக்கோலத்தில் முதலில் வைக்க வேண்டும் என்பதே அத்தப்பூ கோலம் போடுவதின் ஐதீகம். கேரளாவில் சிங்கம் மாதத்தில் பருவமழை பொழிந்து பூக்கள் பூத்துக் குலுங்கும் என்பதால் பூக்களின் திருவிழாவாக ஓணத் திருநாள் பார்க்கப்படுகிறது.
மொத்தம் பத்து நாட்கள் களைகட்டும் ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தப்பூ கோலத்துடன்தான் தொடங்கும். தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தைப் பெண்கள் அழகுபடுத்துவார்கள்.
இதன் ஒருபகுதியாகவே மலையாள மொழி பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் அத்தப்பூ கோலப்போட்டி நடத்தப்படுகிறது.
கோவையில் மலையாள மக்கள் அதிகம் வசிக்கின்றனர். எனவே அங்குள்ள வணிக வளாகம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அத்தப்பூ கோலப்போட்டியில் கடவுள் உருவங்கள், பல வண்ண ரங்கோலிகளிகளை வரைந்து அவற்றில் பூக்களைத் தூவி கோலமிட்டனர். இதனை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.