சென்னையில் இடி-மின்னலுடன் பலத்த மழை: ஒருவர் பலி
சென்னை: சென்னையில் நேற்றிரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலமாக வீசிய காற்றினால் பட்டினப்பாக்கம் பகுதியில் மரம் முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.
வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி தீவிரம் அடைந்துள்ளதால், சென்னையில் நேற்று இரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
கேரளா மற்றும் கடலோர கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. அப்பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், வங்கக் கடலில் நேற்று முன்தினம், வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று காலை வெயில் கடுமையாக இருந்தது. மாலையில் லேசான ஈரப்பதமான காற்று வீசியது. இந்தநிலையில் நேற்று இரவு 9 மணியளவில் திடீரென்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத்தொடங்கியது.
புரசைவாக்கம், வேப்பேரி, வில்லிவாக்கம், பெரம்பூர், திருவான்மியூர், அடையார், மைலாப்பூர், தாம்பரம் உள்பட பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது.
ஒருவர் பலி
சென்னை சென்டிரல் ரயில் நிலையம், பெரியமேடு உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றும் வீசத்தொடங்கியது. பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. பட்டினப்பாக்கத்தில் மரம் முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார்.
சாலைகளில் வெள்ள நீர்
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த திடீர் மழையால் நகரில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. காஞ்சீபுரத்தில் நேற்று இரவு 7.40 மணியளவில் தொடங்கிய மழை சுமார் 2 மணிநேரத்துக்கு மேல் நீடித்தது. இதனால் நகரின் முக்கிய வீதியான மூங்கில் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
திருவள்ளூருரில்
திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழை பெய்தது. திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் திருத்தணியில் பல்வேறு இடங்களில் மழை வெள்ளம் ஆறுபோல் ஓடியது. பல இடங்களில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றனர்.
வேலூரில் பாதிப்பு
திருவண்ணாமலை, வேலூரில் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. புதுச்சேரியில் சூரைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்களில் செல்வோர் பெரிதும் சிரமப்பட்டனர்.
மழை அளவு
அதிகபட்சமாக நேற்று கந்தர்வகோட்டை, தேவாலா 80 மிமீ மழை பெய்துள்ளது. ஒரத்தநாடு 70 மிமீ, முத்துப்பேட்டை, திருப்பத்தூர் 60மிமீ, ராமகிருஷ்ணன் பேட்டை 50 மிமீ, திருக்காட்டுப்பள்ளி, மன்னார்குடி, சின்னகல்லார், உத்ரமேரூர், கலவாய் 40மிமீ, வேதாரண்யம், புதுக் கோட்டை, மரக்காணம், கொடைக்கானல், போளூர், வேலூர், காவேரிப்பாக்கம், குன்னூர், ஆலங்காயம், கோவிலங்குளம், செய்யார் 30 மிமீ மழை பெய்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் திருவாலங்காடு, மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதூர், சென்னை டிஜிபி அலுவலகம், பூண்டி, அண்ணா பல்கலைக் கழகம் ஆகிய இடங்களில் 10 மிமீ மழை பெய்துள்ளது.