முருங்கைக்காய் சாம்பார் இனி வைக்க முடியாது… ஒருகிலோ 200 ரூபாய்க்கு விற்பனை
கரூர்: கரூர் மாவட்டத்தில் முருங்கைக்காய் விளைச்சல் குறைந்துள்ளது. வெளிச்சந்தைகளில் காய் வரத்து குறைவால் கடந்த சில தினங்களாக முருங்கைகாய் கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் முருங்கைப் பிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை சாகுபடி முக்கிய வேளாண் தொழிலாக இருந்து வருகிறது. இங்கு விளையும் முருங்கை காய்களுக்கு தனிச்சுவை உண்டு.
இதனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும், இதுதவிர டெல்லி, மும்பை, பெங்களுர், விசாகப்பட்டினம், காக்கிநாடா, எர்ணாகுளம், கொச்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் இங்கிருந்து காய்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
50 ஏக்கர் பரப்பளவில்
கரூர் மாவட்டத்தில் கொத்தபாளையம், வெஞ்சமாங்கூடலூர், கடாகோவில், வீச்ச நத்தம், அம்மாப்பட்டி, சாந்தப்பட்டி உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் முருங்கையை பயிரிட்டுள்ளனர். சீசன் காலங்களில் இந்த பகுதியில் இருந்து நாள்தோறும் 15 முதல் 35 லாரிகளுக்கு மேல் முருங்கை காய்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
மழை குறைவு
ஆண்டுதோறும் டிசம்பர் வரை முருங்கை காய் சீசன் காலமாகும். ஆனால் கடந்த மாதங்களில் மழை இல்லாமல் கடும் வறட்சி காரணமாக கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நீர் ஆதாரங்கள் குறைந்து போனது.
இதனால் பாசன வசதி கிடைக்காமல் முருங்கை காய் விளைச்சல் பாதிக்கப்பட்டது.
தற்போது கார்த்திகை மாதம் பிறக்கப் போகிறது. காய்கறிகளை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். சீசன் உச்சக் கட்டத்தில் இருக்கும் நிலையில் முருங்கை காய் விளைச்சல் குறைந்து போனதாலும் அதன் வரத்து குறைந்துள்ளதாலும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிலோ ரூ.200க்கு விற்பனை
கடந்த ஆண்டுகளில் இதே மாதத்தில் முருங்கைக்காய் கிலோ ரூ.20 முதல் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களாக முருங்கை காய் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விலையில் 50 பைசா முதல் ரூ.1 வரை விற்க வேண்டிய ஒரு காய் ரூ.5 முதல் ரூ.6 வரை விற்பனையானது.
நேற்று அரவக்குறிச்சியை அடுத்த ஈச்சநத்தம் சந்தையில் வரலாறு காணாத அளவில் முருங்கை காய் விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு காய் ரூ.10-க்கும் கிலோ ரூ.200-க்கும் விற்கப்பட்டது.
முருங்கை சாம்பார்
வரத்து குறைவினாலேயே முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளதாக கூறும் வியாபாரிகள் முருங்கை விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் முருங்கைக்காயை அதிகம் வாங்கி உண்ணும் நுகர்வோர்கள் கலக்கமடைந்துள்ளனர். அப்போ வீட்ல இனி முருங்கைக் காய் சாம்பார் வைப்பது கஷ்டம்தான் என்கின்றனர் இல்லத்தரசிகள்.