வெங்காயம் விலை கொஞ்சம் குறைந்தது... ஆனால் உருளைக்கிழங்கு விலை ஏறிடுச்சே!
சென்னை: தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்த வெங்காயத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதேசமயம், உருளைக் கிழங்கின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அயர்ந்து போய் நிற்கின்றனர்.
கடந்த சில வாரங்களாகவே தங்கத்திற்குப் போட்டி போடுவது போல வெங்காயத்தின் விலை கடுமையாக ஏறி வந்தது. இதனால் செம சோகத்தில் இருந்து வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் 1 கிலோ வெங்காயம் 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக உயர்ந்து சில்லறை விலையில் அதிகபட்சமாக ரூ.100 வரைக்கும் விலை ஏறியது.
இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். வெங்காயத்தை வைத்து எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் கட்சியையும், மத்திய அரசையும் கடுமையாக சாடி வந்தன.
இந்த நிலையில், உரித்த வெங்காயத்தில் கண்ணைக் கொண்டு போய் வைத்த கதையாக டெல்லி காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சித்தும், நான் வெங்காயத்தை சாப்பாட்டில் சேர்த்த நாட்களாகி விட்டது என்று கூறி காங்கிரஸை சிரமத்தில் ஆழ்த்தினார்.
இதையடுத்து வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏற்றுமதி கொள்கையில், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது ஏற்றுமதி குறைந்து விட்டதால் உள்ளூரில் வெங்காய விலையும் குறைய தொடங்கி உள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வெங்காய வரத்து அதிகரித்துள்ளது.
முதல் தரமான நாசிக் பெரிய வெங்காயம் விலை குறைந்து ரூ.55 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது. ஆந்திரா வெங்காயம் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது.
வெங்காயம் விலை குறைந்துள்ள நிலையில், உருளைக் கிழங்கு விலை ஏறியுள்ளது. 28 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 கிலோ உருளைக்கிழங்கு இப்போது ரூ.40க்கு விலை உயர்ந்து விட்டது. அதேசமயம் தக்காளி விலை சற்று குறைந்துள்ளது.