அரசியல் தலைவர்களுக்கு காமராஜர்தான் சரியான "மாடல்".. உம்மன் சாண்டி பேச்சு
சென்னை: அரசியல் தலைவர்கள் பெருந்தலைவர் காமராஜரை முன்னுதாரணமாக கொண்டு சிறந்த முறையில் மக்கள் சேவையாற்ற வேண்டும் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் காமராஜர் சிலையும், பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல சத்தியமூர்த்தி பவன் அமைந்துள்ள இடத்தை தானமாக கொடுத்த தீரர் சத்தியமூர்த்தியின் மார்பளவுச் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாக்கள் இன்று நடந்தன. உம்மன் சாண்டி காமராஜர் சிலையைத் திறந்து வைத்தார். நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தீரர் சத்தியமூர்த்தி சிலையைத் திறந்து வைத்தார்.
மேலும் நவீனப்படுத்தப்பட்ட கூட்ட அரங்கத்திற்கு ராஜீவ் காந்தி பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன் பெயர்ப் பலகையை முன்னாள் தலைவர் குமரி அனந்தன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் உம்மன் சாண்டி பேசுகையில், கேரளாவில் விடுதலைக்காக போராட்டம் நடந்த போது, காமராஜர் கலந்து கொண்டுள்ளார். அதன் மூலம் அவரது விடுதலை வேட்கையை நான் அறிந்து கொண்டேன்.
அவர் ஆட்சியில் சிறந்த நிர்வாகி மட்டுமல்ல. தலைசிறந்த தலைவராகவும் விளங்கியவர். கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே நல்ல உறவை வளர்த்தவர்.
அரசியலுக்கு வருபவர்கள் காமராஜரை முன் மாதிரியாக வைத்துக் கொள்ள வேண்டும். பொது வாழ்க்கையில் எளிமையையும், நேர்மையையும் கடைபிடித்தவர்.
மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக கேரளாவில் மது விலக்கை அமுல்படுத்தி உள்ளோம். அண்டை மாநிலங்களும் இதை பின்பற்றும் என்று நம்புகிறேன்.
காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு யாரையும் குற்றம் சாட்டக்கூடாது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்தால் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும் என்றார் சாண்டி.