ஜனநாயகம் எனும் வீட்டு விளக்கை இளைஞர்கள் காக்க வேண்டும்... கருணாநிதி பேச்சு
சென்னை: பேரறிஞர் அண்ணா கூறியது போல ஜனநாயகம் என்பது வீட்டுவிளக்கு. அதை அணையாமல் காக்கிற பொறுப்பு இளைஞர்களுக்குத் தான் உள்ளது என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நடந்து வரும் சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனைல் கண்டித்து, தி.மு.க. சார்பில் ‘‘தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு'' எனும் தலைப்பில் நேற்று சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகே கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு தி.மு.க. தென்சென்னை மாவட்ட தலைவர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.
பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:-
எங்களுக்கு இணையில்லை....
சட்டசபையில் தி.மு.க. வின் குரல் கேட்க முடியாத இந்த சூழ்நிலையில் எங்கள் குரல் எப்படியும் எந்தவகையிலும் யார் தடுத்தாலும், நிற்காமல் கேட்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. எழுத்து, பேச்சு, செயல், தியாகம் என்ற சொற்களுக்கு மதிப்பளித்து தமிழக மக்களின் எண்ணத்தில் பதியவைத்து தட்டி எழுப்புகிற இயக்கம். சமுதாயம், இலக்கியம், தமிழ் வளர்ச்சித் துறைகளில் தி.மு.க.வுக்கு இணையாக இன்னொரு இயக்கம் தமிழகத்தில் இல்லை.
ஜனநாயகத்திற்கு பாதுகாப்பு...
திருவாரூரில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தாலும் கூட என்னுடைய உடல்நலம் கருதி இன்றைக்கு நடந்து வரும் சட்டமன்றத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. சட்டசபை என்பது ஜனநாயகத்தை போற்றி பாதுகாக்க வேண்டிய இடம். அந்த இடம் இன்று படுகுழியில் தள்ளப்பட்டு வருவதை பார்த்து பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. அதனை காப்பாற்றி புத்துயிர் கொடுக்க வேண்டும். அதற்கு வழிகாட்டும் வகையில் இந்த அமைப்பு செயல்படும்.
மக்களுக்குத் தெரியும்...
1957-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஏறத்தாழ 50, 60 ஆண்டுகளாக நான் உறுப்பினராக இருந்து வருகின்றேன். நான் எப்படி சட்டசபையில் பணியாற்றி வருகிறேன் என்பதை அனைவரும் அறிவர்.
இன்னும் 50 ஆண்டுகள்....
இங்கு பேசிய தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், எனக்கு 90 வயது ஆகிவிட்டது என்று கூறினார். தி.மு.க.வினர் இப்போது இருக்கும் இதே எழுச்சியுடன் தொடர்ந்து இருப்பீர்கள் என்றால் இன்னும் 50 ஆண்டுகள் கூட தமிழகத்தைச் சுற்றி நான் வலம் வருவேன். 90 வயதை கடந்துவிட்டதால் டாக்டர்களின் அறிவுரைகளின்படி என்னால் காலூன்றி நடக்கமுடியாது. 6 மாதத்திற்கு முன்பு டெல்லிக்கு சென்றிருந்தேன். அப்போது, ராஜ்யசபா கூட்டத்தை பார்க்க போயிருந்தேன். அங்கு என்னுடைய வயதில் 2 உறுப்பினர்கள் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள். அதைப்பார்த்த எனக்கு நமது ஆட்சியாளர்களுக்கு இந்த மனம் வரவில்லையே என்று தோன்றியது.
வேதனை ....
என்னை துன்புறுத்தினாலும், சங்கடப்படுத்தினாலும் நான் வருத்தப்பட போவதில்லை. ஆண்டாண்டு காலமாக கட்டிக்காப்பாற்றி வந்த ஜனநாயகம் இன்றைக்கு கேட்பாரற்ற நிலையில் போய்விட்டது. யார் வேண்டுமானாலும் ஜனநாயகத்தை சீரழிக்கலாம் என்ற நிலையை எண்ணும் போதுதான் எனக்கு கவலையும், வேதனையும் ஏற்படுகிறது.
விலை போகும் பொருளான ஜனநாயகம்...
ஜனநாயகம் இன்றைக்கு விலைபோகும் பொருளாகி விட்டது. இந்த ஜனநாயகத்தை தட்டி எழுப்புகிற பெரும் கடமை தி.மு.க.வுக்கு இருக்கிறது. பேரறிஞர் அண்ணா ‘சர்வாதிகாரம் என்பது காட்டுத்தீ, ஜனநாயகம் என்பது வீட்டு விளக்கு என்று சொன்னார். ‘சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளான தி.மு.க., தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, புதிய தமிழகம் உள்பட கட்சிகள் ஜனநாயக கடமையினை உணர்த்தி வருகிறார்கள். அவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும்.
இளைஞர்கள் கையில்....
அண்ணாவின் வேதத்தை ஏற்று ஜனநாயகத்தை கட்டி காப்பாற்ற வேண்டும். ஜனநாயகத்தின் நிழலில் நம்முடைய அரசை நடத்துவோம். தமிழகத்தை நடத்துவோம். உண்மை, தியாகம், எழுச்சி ஆகியவற்றை பின்பற்றி புதுவாழ்வினை அமைப்போம். இளைஞர்களின் கையில் தான் தமிழகம் இருக்கிறது. உங்களை நம்பியே நானும் இருக்கிறேன்' என இவ்வாறு கருணாநிதி பேசினார்.
அலை கடலென திரண்ட கூட்டம்...
கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே.சேகர்பாபு, முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.