கங்கையை சிவகங்கைக்கு கொண்டு வருவேன் என்று மோடி கூறுவது அண்டப்புளுகு: ப.சிதம்பரம்
தேவகோட்டை: கங்கையை சிவகங்கைக்கு கொண்டுவருவேன் என்று மோடி கூறுவது அண்டப்புளுகு என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
3 வருடத்திற்கு முன் என் பிறந்தநாளுக்கு கொடுத்த கடிகாரத்தை இப்போது கொடுத்ததாக கூறி மோடி பொய் பிரசாரம் செய்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் நரேந்திரமோடி ஆகியோருக்கு இடையேயான வார்த்தைப் போர் அதிகரித்து வருகிறது.
சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரத்திற்காக தேவகோட்டை பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட ப.சிதம்பரம் நரேந்திரமோடியை தாக்கிப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது
மோடி மாயை
இன்று நரேந்திர மோடி என்ற மாயையை காட்டுகிறார்கள். இதில் என்ன அதிசயம்? 60 ஆண்டுகளில் செய்யாததை 60 நாட்களிலேயே செய்து முடிப்பாராம். இது எப்படி முடியும்?
பூகோளம் தெரியுமா?
கங்கையை சிவகங்கைக்கு கொண்டு வருவார்களாம். இந்தியாவின் பூகோளம் தெரியுமா? இந்தியாவின் மத்திய பகுதியிலே மலைப்பகுதி உள்ளது என்பது தெரியுமா? மேல்நிலைத் தொட்டியிலே தண்ணீரை ஏற்ற வேண்டுமென்றால் கூட பம்ப் வைத்து ஏற்ற வேண்டும்.
எப்படி கொண்டுவர முடியும்?
6 ஆயிரம் அடி மலையை எப்படி கங்கை நதி கடக்கும். எவ்வளவு குதிரைத்திறன் உடைய பம்ப்பை வைத்து 6 ஆயிரம் அடி மலையை கடக்கப் போகிறீர்கள்?
வாய் ஜாலம்
மேல்நிலைத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற வேண்டும் என்றால் கங்கை தானாக மலையை கடந்து வருமா? கங்கையை சிவகங்கைக்கு கொண்டு வருகிறேன் என சொல்வது எல்லாம் வாய் ஜாலம்.
வெற்றி பெற மாட்டோம் என்ற தைரியத்தில் இப்படி சொல்கிறார்கள். இது போன்ற அண்டப் புழுகு, ஆகாச புழுகுகளை பார்த்து அழுவதா? சிரிப்பதா என தெரியவில்லை.
என்கவுன்டர் முதல்வர்
நரேந்திர மோடி என்கவுன்டர் முதல்வர் என்றும், அவர் மிகப் பெரிய பொய்யர் என்றும் நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அதனை நிரூபிக்கும் வகையில் மோடி தற்போது பேசியுள்ளார்.
கைக்கடிகாரம்
மோடி குஜராத்தில் சொல்லும் பொய்யை தமிழகத்திலும் சொல்லியுள்ளார். 3 ஆண்டுகளுக்கு முன் எனது 65-வது பிறந்தநாளையொட்டி, என் கட்சிக்காரர்களுக்கு கைக்கடிகாரம் வழங்கப்பட்டது. அதை இப்போது கொடுத்ததாக மோடி தவறாக கூறுகிறார்.
சந்திக்கத் தயார்
வாக்காளர்களுக்கு கைக்கடிகாரம் வழங்கினேன் என்று என் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தால் அதனை சந்திக்க தயாராக இருக்கிறேன்.