தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத வகையில் இருக்கும்- ப.சிதம்பரம்
காரைக்குடி: லோக்சபா தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத வகையில் அமையும் என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார் கூடுதல் வாக்குப் பதிவு சாதகமாகவும் இருக்கலாம் பாதகமாகவும் இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிவகங்கை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட, காரைக்குடி அருகே கண்டனூரில் உள்ள விசாலாட்சி நினைவு உயர்நிலைப் பள்ளியின் 110ஆவது வாக்குச் சாவடியில் வரிசையில் நின்று தனது வாக்கினை பா.சிதம்பரம் பதிவு செய்தார்.
அவருடன் மகனும் வேட்பாளருமான கார்த்தி சிதம்பரம், மனைவி நளினி மருமகள் ஸ்ரீநிதி ஆகியோரும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
வாக்குப் பதிவுக்கு தனது அடையாளமாக சிதம்பரம் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்தார். கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி, தாயார் ஆகியோர் இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்கிய பூத் சிலிப்பைக் காண்பித்து தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர்.
திருட முயற்சி
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம் கூறியதாவது:
இந்த மக்களவைத் தேர்தலில் ஒரு கட்சி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றியைத் திருடிவிடலாம் எனப் பார்க்கிறது. ஆனால் இதற்கான தகுந்த பதிலை வாக்காளர்கள் வாக்கு அளிப்பதன் மூலம் தருவார்கள்.
எதிர்பாராத வெற்றி
இந்தத் தேர்தலின் முடிவானது யாரும எதிர்பாராத வகையில் அமையும். இளைஞர்களும், புதிய சிந்தனை உடையவர்கள் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதை இளைய தலைமுறையினர் விரும்புகின்றனர்.
இளைஞர்களுக்கு வாய்ப்பு
இதனடிப்படையில் தான் 14 இளைஞர்களை காங்கிரஸ் கட்சி தேர்தலில் களம் இறக்கி உள்ளது. இரண்டாம் தலைமுறையினரிடம் இதற்கான வரவேற்பு அதிகளவில் உள்ளது. மூடநம்பிக்கைகளும், பழைய மரபுகள் மீறி புதிய அணுகுமுறையை இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வெற்றி நிச்சயம்
தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களிடையே நாங்கள் கண்ட எழுச்சி வியப்பைத் தந்துள்ளது. சிவகங்கை லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும்.
144 தடை உத்தரவு
தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள முடிவுகள் ஏறத்தாழ ஏற்றுக்கொள்ள கூடியது. வருகிற சட்டமன்ற தேர்தலிலும் ராகுல்காந்தி கூறியது போல, காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்து போட்டியிடும். தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது எங்களுக்காக. அ.தி.மு.க.வினருக்கு மீறுவதற்காக
கூடுதல் வாக்குப்பதிவு
75-80 சதவீதம் வரையிலான வாக்குப் பதிவு ஆளும் கட்சிக்கு எதிரானதாக இருக்குமா எனக் கேட்கிறீர்கள் கூடுதல் பதிவு ஆளும் கட்சிக்கு எதிரான முடிவாகத் தான் இருக்க வேண்டும் என்பது அர்த்தமில்லை.
சாதகமான முடிவு
1971, 1996 ஆகிய தேர்தல்களில் கூடுதல் வாக்கப் பதிவு ஆளும் கட்சிக்கு சாதகமாகவும் இருந்துள்ளது. கூடுதல் வாக்குப் பதிவு சாதகமாகவும் இருக்கலாம் பாதகமாகவும் இருக்கலாம். அதை தெளிவாகக் கூற முடியாது என்று ஒருவித குழப்பத்துடனே பேட்டியை முடித்தார் பா.சிதம்பரம்.