68 வயசாச்சு.. இனி காந்தி வழியில் பணியாற்றப் போகிறேன்.. ப.சிதம்பரம்
புதுக்கோட்டை: எனக்கு 68 வயதாகி விட்டது. இனி காந்தி வழியில் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்றப் போகிறேன் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மறுபடியும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்காது என்ற ஊகத்தை தனது விரக்தியான குரலில் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளாரோ என்ற சலசலப்பும் கூடவே எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் ப.சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் போட்டியிடவில்லை. தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை அங்கு நிறுத்தி விட்டு அவர் ஒதுங்கி விட்டார். இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நேற்று நடந்த பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது...
8 தேர்தலைப் பார்த்து விட்டேன்
கடந்த 30 ஆண்டுகளில் 8 தேர்தலைச் சந்தித்துவிட்டேன். 17 ஆண்டுகள் அமைச்சராக இருந்தேன். அதில் சாதாரண ஜவுளித் துறையோ வேறு துறையோ கொடுத்திருந்தால் அமைதியாக பணியாற்றி் இருக்க முடியும், தந்ததோ நிதியும், உள்துறையும்தான். இதில் நாளொன்றுக்கு 18 மணி நேரம் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
கந்து வட்டி வாங்கியதில்லை
நான் கந்துவட்டி வாங்கியதில்லை, கட்டப்பஞ்சாயத்து, சாதிக்கலவரத்தில் ஈடுபட்டதில்லை, எம்மதமும் சம்மதம்தான் என்ற கொள்கையில் பின்வாங்கியதில்லை, பிறரிடம் சல்லிக்காசு கூட வாங்கியது கிடையாது.
இன்னும் 8 வருஷமோ, 10 வருஷமோ...
அடுத்த எட்டு பத்து ஆண்டுகள் வாழ்வதற்கு பெரிய பணம் தேவையில்லை. எனக்கு 68 வயதாகிவிட்டது. எத்தனை ஆண்டுகள் இனி உடல் வலிமையோடு சுற்றி வர முடியும்.
மண்ணில் பிறந்தவர்கள் மண்ணுக்குத்தான் செல்ல வேண்டும்
மண்ணில் பிறந்தவர்கள் மண்ணுக்குத்தான் செல்ல வேண்டும். மறு ஜென்மம் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது.
இனி மக்கள் பணிதான்
எனவே, என் உள்மனம் சொன்னபடி காந்திய வழியில் சொந்தத் தொகுதியில் தங்கி மக்களுக்கு பணியாற்றப் போகிறேன் என்றார் அவர்.
ப.சிதம்பரத்தின் பேச்சு அவரது ஆதரவாளர்களைக் கவலை கொள்ளச் செய்துள்ளது.