பழனி - திருச்செந்தூர் பயணிகள் ரயில் ரெடி: 16ம் தேதி துவக்கி வைக்கும் ஜி.கே. வாசன்
திண்டுக்கல்: பழனி-திருச்செந்தூர் பயணிகள் ரயிலை வரும் 16ம் தேதி மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் துவக்கி வைக்க உள்ளார்.
திண்டுக்கல் - பழனி - பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில் அகல ரயில்பாதை அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியது. 224 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த திட்டப் பணிக்காக கடந்த 2009ம் ஆண்டு இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆமை வேகத்தில் நடைபெற்ற இப்பணி கடந்த ஆண்டு திண்டுக்கல்லில் இருந்து பழநி வரை நிறைவு பெற்றது.
இதன் காரணமாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பழனி - திருச்செந்தூர் ரயில் சேவை, திண்டுக்கல், விருதுநகர் வழியாக இந்த மாதத்தில் இயக்கப்பட உள்ளது.
பழனி - திண்டுக்கல் - மதுரைக்கு, ரயிலில் மிகக் குறைந்த கட்டணம் என்பதால் ஏராளமான பயணிகள் பயணம் செய்ய ஆர்வமாக உள்ளனர். மேலும், தமிழக அரசின் பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் பல மடங்கு குறைவு என்பதால் நடுத்தர மக்களும், ஏழை எளிய மக்களும் ரயில்வே பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.
இந்த நிலையில் பழனி - திருச்செந்தூர் பயணிகள் ரயிலை வரும் 1 ம் தேதி மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பழனியில் துவக்கி வைக்க உள்ளார். இந்த தகவலை திண்டுக்கல் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சித்தன் உறுதிப்படுத்தியுள்ளார்.