11 பேர் விடுதலை.. கும்பகோணம் குழந்தைகளின் பெற்றோர்கள் கொதிப்பு- அப்பீல் செய்ய முடிவு
தஞ்சாவூர்: 94 குழந்தைகள் பலியான கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் 11 பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம்.
தீவிபத்துக்கும் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது பெற்றோர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகவும் கூறியுள்ளனர்.
11 பேர் விடுதலை
மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.நாராயணசாமி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பி.பழனிசாமி, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், மாதவன், வகுப்பு ஆசிரியைகள் தேவி, மகாலட்சுமி, அந்தோணியம்மாள், கும்பகோணம் நகராட்சியின் அப்போதைய ஆணையர் சத்தியமூர்த்தி, நகரமைப்பு அலுவலர் முருகன், உள்ளிட்ட 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பெற்றோர் எதிர்ப்பு
11 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனையாவது வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நல்ல தீர்ப்பு வேண்டும்
பத்து வருடத்திற்கு கிடைத்த தீர்ப்பு இது. எங்கள் குழந்தைகளின் ஆன்மா சாந்தியடையும் வகையில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 11 பேர் ஏன் விடுதலை செய்யப்பட்டனர் என்று தெரியவில்லை என்றும் சில பெற்றோர்கள் தெரிவித்தனர்.
10 ஆண்டுகள்
தீ விபத்து நிகழ்ந்த போது 24 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. 24 பேரில் 3 பேர் ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 21 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.