”பழசுதான் பெஸ்ட்”- திண்ணைப்பிரச்சாரத்தை கையில் எடுத்த அரசியல் கட்சிகள்
கடலூர்: லோக்சபா தேர்தலில் பழங்கால திண்ணை பிரசாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளன அரசியல் கட்சிகள்.
லோக்சபா தேர்தல் ஏப்ரல் 24 ஆம் தேதி நடைபெற உள்ளதால் களத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இதற்காக விதம் விதமான முறைகளை அவர்கள் கையாண்டு வருகிறார்கள்.
ஐந்து முனைப்போட்டி ஏற்பட்டுள்ள கடலூர் தொகுதியில் வேட்பாளர்கள் பிரசாரத்தால் மக்களிடம் பெரியதாக மாற்றம் ஏற்படவில்லை என நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
தெரிந்ததையே மீண்டும் சொல்லனுமா?:
பொதுவாக தலைவர்கள் பிரசார கூட்டம், பொதுக்கூட்டம், செயல்வீரர்கள் கூட்டம், தெருமுனைப்பிரசாரம் என அனைத்துக்கூட்டங்களிலும் அந்தந்த அணியில் உள்ள கட்சிக்காரர்கள் தான் முன்னிலை வகிக்கின்றனர். அவர்களிடமே கொள்கைகளைப்பற்றியோ, வரும் காலத்தில் ஆட்சி முறைப்பற்றியோ பேசி எந்த பலனும் ஏற்படப்போதில்லை என்கின்றனர் கட்சிப் பிரமுகர்கள்.
காசு குடுத்தாதான் தோசை:
கட்சிக்காரர்கள் அல்லாமல் நடுநிலையில் உள்ள கூலித் தொழிலாளிகள் இன்று பிரசார பேரணியில் கலந்துகொண் டால் எவ்வளவு ஊதியம் கிடைக்கும் என கணக்கீடு செய்கின்றனர்.
எனக்கு, வண்டிக்கு ரெண்டுக்கும் வேணும்:
தினப்படி கூலி 500 என்றால் தேர்தல் பணியாற்ற இதை விட கூடுதலாகவும், பிரியாணி, மது, வண்டிக்கு பெட்ரோல் இருந்தால் மட்டுமே ஆர்வத்துடன் பங்கேற்கும் நிலை உள்ளது.
சூடா சிக்கன் பிரியாணி:
இவற்றை பூர்த்தி செய்ய யோசிக்கும் அரசியல் கட்சிகளுக்கு பிரசாரத்தில் கூட்டம் கூடுவதே குறைந்து விடுகிறது. தொழிலாளர்கள் நிலை இது என்றால் நிர்வாகிகள் நிலை இதைவிட மோசம் .விலைஉயர்ந்த மதுவகைகள், சிக்கன் பிரியாணி இருந்தால் மட்டுமே பிரச்சாரத்துக்கு "வெல்கம்" சொல்கிறார்கள்.
ஆதரவு கிடைப்பது சந்தேகம்தான்:
வேட்பாளர்கள் தமது ஆதரவாளர்களை பெரும் செலவு செய்து திருப்திபடுத்தினால் கூட மக்கள் மத்தியில் ஆதரவு தரும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.
திண்ணை பிரச்சாரம்தான் கரெக்ட்:
அதேநேரத்தில் திண்ணை பிரசாரம்தான் கிராமங்களில் பெருமளவு கைகொடுக்கிறது. வீடுவீடாக சென்று குடும்பத்தினரிடம் பேசி, அவர்களது சூழ்நிலையை உணர்ந்து அவர்களுக்கு தேவையான கோரிக்கைகளை முடித்து தருவதாக கூறும் வாக்குறுதிகள் நிலைத்து நிற்பதாக சில கட்சியினர் கருதுகின்றனர்.
பைசா செலவில்லா பிரச்சாரம்:
அதனால் அவர்கள் கட்சிக்கொள்கைகளை மறந்து தம்மிடம் வந்து மதித்து ஆதரவு கேட்பவர்களுக்கு, ஓட்டு போட தயார் நிலையில் உள்ளனர். இதனை உணர்ந்த சில கட்சிகள் ஓசையின்றி திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.