ஆம் ஆத்மிக்கு ஆதரவாக மக்கள் மவுன புரட்சி செய்கிறார்கள்: ஞானி
சென்னை: ஆம் ஆத்மிக்கு ஆதரவாக மக்கள் மவுன புரட்சி செய்கிறார்கள் என்று ஆலந்தூர் சட்டசபை வேட்பாளர் ஞானி தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுடன் ஆலந்தூர் சட்டசபை இடைத்தேர்தலும் நடக்கிறது. இதில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மூத்த பத்திரிகையாளர் ஞானி போட்டியிடுகிறார். அவர் தனது வாக்கை பதிவு செய்த பிறகு அளித்த பேட்டி: ஆம் ஆத்மி கட்சிக்கும் ஆதரவு அலை உள்ளது, ஆனால் அது மவுன அலை.
பிற கட்சியினரைப்போல ஆர்ப்பரிக்கும் அலை இது கிடையாது. எங்களுக்கு ஆர்ப்பரிப்பதில் விருப்பமும் கிடையாது. மக்கள் வெளியில் தெரியாமலே எங்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார்கள். ஒரு மவுன புரட்சியே ஆம் ஆத்மிக்கு ஆதரவாக நடைபெற்று வருகிறது.
தேர்தலில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சிறிய அளவு அதிகாரங்களே எஞ்சியுள்ளன. அந்த அதிகாரத்தில் ஒன்றுதான் 144 தடையுத்தரவு. கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறதே என்று வருத்தப்படாமல் நாம் நேர்மையாக இருப்பதற்காக அந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என்பதை உணர வேண்டும்.
பணம் கொடுப்பதும், அதை பெற்றுக் கொண்டு வாக்களிக்கவும் நமது மக்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். மக்கள் தாங்களாக முன்வந்து திருந்தினால் இதுபோன்ற தடையுத்தரவுகளுக்கும் அவசியம் இருக்காது என்றார்.