மழைக்காக நிர்வாண பெண் சிலை பிரதிஷ்டை- தடுத்து நிறுத்தி போலீசார் அறிவுரை!
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மழை வேண்டி விநோதமான முறையில் அமைக்கப்பட்ட நிர்வாண பெண் சிலையானது அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், தா.பேட்டை ஒன்றியத்தில் காருகுடி கிராமம் அமைந்துள்ளது. இங்கு பருவமழை பொய்த்து போனதால் ஆடுமாடுகளுக்கு கூட தீவனம் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, ஏரியிலிருந்து களிமண் எடுத்துவரப்பட்டு 6 அடி உயரம் உள்ள நிர்வாண பெண் சிலையை செய்து அதை மாட்டு வண்டியில் வைத்து கிராமத்தின் தெருக்கள் வழியாக இழுத்து செல்வது இங்கு வழக்கத்தில் இருந்தது.
அப்போது பெண்கள் "வறட்சி கொடும்பாவி பெண்ணே.... உன்னால் மழை பொய்த்துபோனதே" என்று அழுது கும்மிஅடித்து ஆடுவார்கள். பின்னர், மழை பொழிந்தால் களிமண்ணால் செய்யப்பட்டுள்ள களிமண் பொம்மையை ஏரியில் தங்கியிருக்கும் மழைநீரில் கரைத்து விடுவர்.
"இந்த சடங்கினை நாங்கள் படும் துயரத்தை, துன்பத்தை மறந்து மனதை ஆறுதல்படுத்தி கொள்ள நடத்தப்படும் சடங்காகவே கருதுகிறோம்" என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் மழை வேண்டி நிர்வாண பெண் கொடும்பாவி சடங்கு நடத்த பொதுமக்கள் ஏற்பாடு செய்தனர். முசிறி தாசில்தார் மலர்கொடிக்கு இந்த தகவல் கிடைத்தது.
அவரது ஆலோசனையின் பேரில் தா.பேட்டை போலீசார் காருகுடி கிராமத்திற்கு சென்று மழைவேண்டி சடங்கு நடத்திய பொதுமக்களிடம் நிர்வாண பெண் சிலையை செய்து சடங்கு நடத்துவது பெண்ணினத்தை அவமதிக்கும் செயல். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று கூறி, சிலையை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.