எந்த அடிப்படையில் ஆட்சியை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் மக்கள்?.. கட்சிகள் சொல்வது என்ன??
சென்னை : அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரத்தை உற்று கவனித்தால் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான விஷயத்தை குறிவைப்பது தெளிவாகிறது.
ஆனால், மக்களின் மனநிலை எதனைக் கருத்தில் கொண்டு செயல்படப் போகின்றது என்பது தேர்தல் முடிவுகள்தான் வெளிக்காட்டும்.
ஆளாளுக்கு ஒருவிதமாக மையப் புள்ளிகளை தேர்ந்தெடுத்திருந்தாலும்,அதெல்லாமே சாத்தியப் படுமா என்பதும் கேள்விக்குறிய ஒன்றாகதான் உள்ளது.
மதச்சாற்பற்ற கூட்டணிக்கு திமுக ஆதரவு:
திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் பறக்கும் கப்பல், கல்விக்கடன் தள்ளுபடி ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால்,அதையெல்லாம் விட பிரதானமாக மதச்சாற்பற்ற கூட்டணிக்குதான் தாங்கள் ஆதரவு என்று தெரிவித்துள்ளனர்.நடுவில் எதிராளிகளையும் போட்டு கிழிப்பதற்கு தயங்குவதில்லை.
”கருப்புபணம்” மீட்பு அதிமுக:
அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளோ இலங்கை தமிழர் தீர்வு, கட்சத்தீவு மீட்பு என்று நீண்டதாக இருக்கின்றது.ஆனால், முக்கியமாக "கருப்பு பணத்தை" மீட்கப் போவதாக கூறிவருகின்றனர்."மோடிக்கு" முன்னே இந்த "லேடி" தான் என்று கொஞ்சம் ஓவர் கான்பிடன்ஸ் விசயங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
”சாதி” கணக்கெடுப்புக்கு பாமக:
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காட்டுக்கூய்ச்சல் போட்டு வருகின்றது பாமக.ஆயிரம் குழப்படிகள் வீட்டுக்குள் இருந்தாலும், கூட்டணிக்குள் கம்பீரமாகத்தான் வலம் வந்து கொண்டிருக்கின்றது.
”தண்ணீர்” வாக்குறுதி தேமுதிக:
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தே தீருவோம் என்கின்றனர் தேமுதிகவினர்.கூட்டணியில் தலைவரைவிட அண்ணி கைதான் ஓங்கி இருக்கின்றது.2016 இல் எப்படியாவது தமிழக நாற்காலியை பற்றிவிட கனவு கண்டு கொண்டே பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
வளர்ச்சியை கூறும் பாஜக:
நரேந்திர மோடியும், பாஜகவும் தங்களின் பிரசாரத்தில் பெரும்பாலும் வளர்ச்சியை மையப்படுத்தியே பேசி வருகின்றனர்.விளம்பரங்கள் அனல் பறக்க இருக்கின்றனதான்.ஆனால், ஆட்சிக்கு வந்தால் முன்னேற்றங்கள் நடைபெறுமா என்பது கடவுளுக்குதான் வெளிச்சம்.
மதச்சார்பின்மை காங்கிரஸ்:
காங்கிரஸ் கட்சியை எடுத்துக் கொண்டால் உரிமைகள் மற்றும் மதசார்பின்மையை மையமாக வைத்து பிரசாரம் செய்து வருகிறது.வலிமையான இந்தியா என்று விளம்பரம் செய்யும் காங்கிரஸ் இந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வலிமைக்கு கேவலம் ஒரு ஹார்லிக்ஸ் கூட வாங்கிக் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.
ஊழல் ஒழிப்பு ஆம்ஆத்மி:
ஆம் ஆத்மி கட்சி ஊழலை மையப்படுத்தியும் மாநில கட்சிகள் தங்களின் தனித்துவத்தை மையப்படுத்தியும் பிரசாரம் செய்து வருகின்றன.ஆனாலும், கெஜ்ரிவால் பணம் யார் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறுகின்றார்.போகும் இடமெல்லாம் அடி வாங்கினாலும் "அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி" என்று மனதை தேற்றிக் கொள்வதென்னவோ நடக்கத்தான் செய்கின்றது.
மக்கள் முடிவு என்ன? :
ஆனால் வாக்காளர்கள் எதன் அடிப்படையில் ஓட்டளித்து தங்கள் தொகுதி எம்பியையும், நாட்டின் புதிய அரசையும் தேர்ந்தெடுக்க உள்ளனர் என்பது குறித்து லைவ்மின்ட் பத்திரிக்கையில் கார்த்திக் சசிதர் கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார்.
யாருக்கு ஓட்டு?:
அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரத்தை கொண்டே யாருக்க ஓட்டளிப்பது என முடிவு செய்வதால் இந்த தேர்தல் மக்கள் முடிவு எடுக்க வேண்டிய முக்கியமான சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.ஆனால், கட்சிகளோ ஒருவரை ஒருவர் நன்றாக திட்டிக் கொள்கிறார்களே தவிர மக்களுக்கு என்ன செய்யலாம் என்பதை பற்றி யோசிக்க யாரும் தயாராக இல்லை.
கட்சிகளின் குழாயடி சண்டை:
அரசியல் கட்சிகள் ஒன்றை ஒன்று நேரடியாக தாக்கிப் பேசிக் கொள்வது மட்டுமின்றி தங்களின் நிகழ்ச்சி நிரல்கள் மற்றும் தேர்தல் அறிக்கைகளும் ஒன்றை விட மற்றது சிறந்தது என காட்டி கொள்வதில் கவனம் செலுத்தி தயாரிக்கப்பட்டுள்ளன.கல்லாப் பெட்டி நிரம்பினால் போதும் என்ற விதத்தில் பணத்தை பிரச்சாரத்திற்கு வாரிவாரி இறைக்கின்றன கட்சிகள்.
ஆராய்ந்து பார்த்துதான் ஓட்டு:
இதனால் பல்வேறு கட்சிகளின் நிலைகளை பல்வேறு பக்கங்களில் இருந்து ஆராய்ந்து ஓட்டளிக்க வேண்டிய கட்டாயத்தில் வாக்காளர்கள் உள்ளனர். மத்தியில் அமையும் ஆட்சி நன்றாக அமைய மாநிலங்களிலும் சிறந்த கூட்டணிகளை தேர்ந்தெடுக்கதான் வேண்டும் மக்கள்.