ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்...ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு
ஸ்ரீரங்கம்: முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் அவரது எம்.எல்.ஏ அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீரங்கம் திருவள்ளுவர் தெருவில் உள்ள 2 மாடிகளைக் கொண்ட பழமையான கட்டடத்தில் தனியார் செல்போன் நிறுவனம் ஒன்று சிக்னல் டவர் அமைக்கவுள்ளது. இதற்கான பணிகளும் தொடங்கின. ஆனால் இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த செல்போன் டவர் பெரிய அளவில் இருப்பதால் இதை அமைத்தால் ராஜகோபுரத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து வரும். மேலும் கோபுரத்தின் அழகும் பாதிக்கப்படும் என்று மக்கள் கூறுகிறார்கள். ஆனால் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் டவர் அமைக்கும் பணி தொடர்ந்தது.
இதையடுத்து இதை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரி இன்று ஆண்களும், பெண்களுமாக திரண்ட மக்கள் ஜெயலலிதாவின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து போலீஸார் திரண்டு வந்தனர். மக்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஒரு குழுவினர் மட்டும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள், அங்கு உதவி அலுவலர் பரமேஸ்வரனிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்தனர். இந்த திடீர் போராட்டத்தால் ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு நிலவியது.