நிலக்கரி ஏற்றிவந்த இந்தோனேசிய கப்பலில் பிலிப்பைன்ஸ் எலக்ட்ரீசியன் பலி!
தூத்துக்குடி: தூத்துக்குடிக்கு நிலக்கரி ஏற்றிவந்த இந்தோனேசிய கப்பலில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த எலக்ட்ரீசியன் பலியானார்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை ஏற்றி கொண்டு இந்தோனேசியாவில் இருந்து பர்னான் என்ற கப்பல் இன்று அதிகாலை வந்தது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் உள்ள நிலக்கரி இறக்கும் தளம் 2ம் தளத்திற்கு வந்த கப்பலில் இருந்து அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்கும் பணிகள் நடைபெற்றது.
கப்பலில் இருந்து கன்வேயர் மூலம் நிலக்கரி அனல்மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. கப்பலில் இருந்து கிரப் பக்கெட் மூலம் இறக்குமதி செய்யப்பட்டபோது அப்பகுதியில் பணியில் இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த எலக்ட்ரீசியன் எக்கோய் ஆண்டிரஸ் லிப்ரே என்ற பணியாளர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் உடல் நசுங்கி பலத்தகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து பலியான பிலிப்பைன்ஸ் எலக்ட்ரீசியனின் உடல் தற்போது தூத்துக்குடி துறைமுக சபை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.