இன்று மகாளய அமாவாசை: காவிரியில் நீராடி முன்னோர்களை வழிபடும் மக்கள்
திருச்சி: மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று புண்ணிய தலங்கள் மற்றும் ஆறு, குளங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு நடத்தினர்.
புரட்டாசி மாதம் பிரதமை முதல் அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் எனப்படுகிறது. இந்த நாட்களில் நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து நம் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம். மகாளய பட்சத்தில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வது விசேஷம்.
இன்று மகாளய அமாவாசை என்பதால் புண்ணிய தீர்த்தங்களில் மக்கள் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
திருச்செந்தூர், கன்னியாகுமரி
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், திருச்செந்தூர் கடல், பவானி கூடுதுறை, திருச்சி காவிரி ஆறு, திருவையாறு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து திதி கொடுத்தனர்.
சென்னை மெரீனா கடற்கரையில்
சென்னை மெரினா கடற்கரை, மயிலை கபாலீஸ்வரர் கோயில் குளம், திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளம், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில், மதுராந்தகம் கோதண்டராமர் கோயில் குளம், மாமல்லபுரம் புண்டரீக புஷ்கரணி குளம் உள்பட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் ஏராளமானோர் திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். மகாளய அமாவாசையை முன்னிட்டு வாழை இலை, தேங்காய், வாழைப்பழம், பூ, வாழைக்காய் விற்பனை களைகட்டியது.
ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபம்
மகாளய அமாவாசை என்பதால், திருச்சியில் ஸ்ரீரங்கம் காவிரியாற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுக்க திரண்டுள்ளனர்.
காவிரியாற்றில் பாதுகாப்பு
காவிரியாற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் பக்தர்கள் பாதுகாப்பாக நீராடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் காவிரியாற்றில் ரப்பர் படகில் ரோந்து வந்தவாறு மீட்புப் பணியில் தயார் நிலையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வேதாரண்யம் கடற்கரை
இதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யம், பூம்புகார், தஞ்சை மாவட்டம், திருவையாறு, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
வீட்டிலும் திதி கொடுக்கலாம்
பெற்றோர் மரணமடைந்த தினத்தில் திதி செய்யாதவர்கள், முடியாதவர்கள் கூட, மகாளய அமாவாசை தினத்தில் பெற்றோர்களுக்கு திதி கொடுக்கலாம். பித்ரு பூஜையை ஆறு, நதி, குளக்கரைகளில் செய்ய வேண்டும். இல்லத்தில் இருந்தபடியும் செய்யலாம். மகாளயம் செய்யாதவர்களுக்கு மங்களம் உண்டாகாது என்பது ஐதீகம்.
அன்னதானம் சிறப்பு
மகாளய அமாவாசையில் நீங்கள் செய்யும் அன்னதானம் உங்கள் முன்னோர்களின் ஆத்ம பலத்தை அதிகரிக்க செய்யும் என்கின்றன புராணங்கள். இந்த தான-தர்மம் மூலம் மகிழ்ச்சி அடையும் உங்கள் முன்னோர்கள் மிகவும் திருப்தியுடன் உங்கள் வீட்டில் இருந்து பித்ருலோகத்துக்கு கிளம்பிச் செல்வார்கள். அவர்கள் மன நிறைவுடன் வாழ்த்த, வாழ்த்த உங்கள் வாழ்க்கையில் மேம்பாடு உண்டாகும்.