ஆவின் பால் கலப்பட ஊழல்: மாஜி மந்திரி மாதவரம் மூர்த்தியை விசாரிக்க ராமதாஸ் கோரிக்கை
சென்னை: ஆவின் பால் கலப்பட ஊழல் குறித்து நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித்தலைவர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பால் கலப்படம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தியிடம் விசாரனை நடத்தாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பால் கலப்பட ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தமிழக காவல்துறையின் குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.பி.சி.ஐ.டி) சிறப்பாக செயல்பட்டு பல உண்மைகளை கண்டறிந்துள்ளனர்.
பால் கலப்பட ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வைத்தியநாதன் அ.தி.மு.க.வில் மாவட்ட நிர்வாகியாக இருந்தவர். பால்வளத்துறை அமைச்சராக இருந்த மாதவரம் மூர்த்தி உட்பட அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கு நெருக்கமானவர்.
பால் கலப்பட மோசடி கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பால்வளத்துறை அமைச்சராக இருந்த மூர்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்டார். பால் கலப்பட ஊழல் தொடர்பாக இதுவரை அவரிடம் எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, ஆவின் பால் கலப்பட ஊழல் குறித்து நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி, இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்து தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
அதுமட்டுமின்றி, உச்சநீதிமன்றம் அண்மையில் பரிந்துரைத்தவாறு பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கும் வகையில் உரிய சட்டத்திருத்தம் செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.