அதிமுகவுக்காக ஓட்டு வேட்டையாடும் தூக்குத் தண்டனைக் கைதி... பாமக புகார்
சென்னை: தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் விதிமுறைகளை மீறி சிறையில் இருந்தபடியே அதிமுகவுக்காக செல்போன் மூலம் வாக்கு சேகரித்து வருவதாக பாமக குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக பாமக தலைமைத் தேர்தல் பணி பொறுப்பாளர் வழக்கறிஞர் பாலு, வழக்கறிஞர் ஜோதிமணி ஆகியோர் தலைமையிலான வழக்கறிஞர்கள் குழு இன்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தது.
அதில், நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் வரும் 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மக்களவைத் தொகுதிகளில் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதற்காக தருமபுரி தொகுதிக்குட்பட்ட தருமபுரி-பென்னாகரம் சாலை மேம்பாலம் அருகில் பல கோடி ரூபாய் செலவில் மேடை மற்றும் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
பொதுக்கூட்டத்திற்கு மக்களை கட்டாயப்படுத்தி அழைத்து வருவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளும், சிற்றுந்துகள் மற்றும் வேன்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சொந்தமான வாகனங்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த வாகனங்கள் அனைத்துமே போக்குவரத்து, வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கட்டாயப்படுத்தி வரவழைக்கப்படவை ஆகும்.
பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வரப்படும் மக்களுக்கு வேட்டி அல்லது சேலைகள், பிரியாணி பொட்டலம், ரூ.300 பணம் மற்றும் அதிமுக கரை பதிக்கப்பட்ட துண்டுகள், தொப்பிகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் வழங்கப்படுகின்றன.
இதேபோல் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியிலும் ஜெயலலிதா பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்காக மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து வகையான விதிமீறல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. இவை தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளிடம் புகார் அளித்த போதிலும் விதிமீறல்களைத் தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இவை அனைத்துமே தெளிவான தேர்தல் நடத்தை விதி மீறல்கள் ஆகும். தேர்தலில் அனைத்து வேட்பாளர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தை இது சிதைத்து விடும். எனவே, இந்த விதிமீறல்களை தடுக்க தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தருமபுரி இலக்கியம்பட்டி பகுதியில் கடந்த 3.2.2000 அன்று நடந்த போராட்டத்தின்போது கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் 3 பேரை பேருந்துடன் எரித்து கொன்ற வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அதிமுக நிர்வாகி முனியன் என்பவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
அவர் 96596 70430 என்ற எண் கொண்ட செல்பேசி மூலம் சிறையில் இருந்தவாறே தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களிடம் தொடர்பு கொண்டு அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கேட்டு வருகிறார். தினமும் குறைந்தது 50 பேரிடமாவது இவ்வாறு அவர் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
இது தேர்தல் நடத்தை விதிகளை மட்டுமின்றி, சிறை விதிகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களையும் மீறிய செயலாகும். இதை உடனடியாக தடுத்து நிறுத்துவதுடன், இதற்கு துணையாக இருந்த சிறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக கோரியுள்ளது.