100க்குப் போன் செய்து கெட்ட வார்த்தையால் திட்டிய 17 வயது சிறுவன்!
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட 17 வயது சிறுவன், கெட்ட வார்த்தையால் திட்டிய செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுவனைப் போலீஸார் கைது செய்து தற்போது சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட தகவல் தொடர்பு கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இங்குள்ள கட்டணமில்லா தொலைபேசிக்கு கடந்த ஜூலை 3-ம் தேதி முதல், 25-ம் தேதி வரை தினமும் ஒருவர் தன்னுடைய செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
போலீஸாரை ஆபாசமாகத் திட்டியும், தகாத வார்த்தைகளால் திட்டியும், மிரட்டல் விடுத்துப் பேசி வந்துள்ளார். இதனால் கொதிப்படைந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த நபரைப் பிடிக்க தீவிரமாக களத்தில் இறங்கினர். விசாரணையில், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த, 17 வயது சிறுவன் சிக்கினா். 9ம் வகுப்பு படித்துள்ள இந்த சிறுவன் தற்போது மேற்கொண்டு படிக்காமல் வீட்டில் இருந்து வருகிறான்.
இவன்தான் தினசரி போலீஸாரை போனில் திட்டியவன் என்பதை உறுதி செய்த போலீஸார், அவனைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். பின்னர் அவனை சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.