காவல் நிலையத்தில் வாலிபர் சுட்டு கொலை- எஸ்.பி.பட்டினம் எஸ்.ஐ, ஏட்டுககள் இடமாற்றம்!
ராமநாதபுரம்: காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் சுட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் எஸ்.பி.பட்டினம் சிறப்பு எஸ்.ஐ., தலைமை காவலர்கள் உட்பட 6 பேர் ஆயுத படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் கடந்த 15 ம் தேதி காவல் நிலையத்தில் விசாரணை கைதி சையது முகமது என்பவர் அங்கு பணியில் இருந்த எஸ்.ஐ. காளிதாசால் சுட்டு கொல்லப்பட்டார்.
அது தொடர்பாக நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி வேலுச்சாமி விசாரணை மேற்கொண்டுள்ளார். நேற்று எஸ்.பி.பட்டினம் காவல்நிலையத்தில் அவர் நேரில் ஆய்வு நடத்தினார்.
இந்நிலையில், அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு எஸ்.ஐ. பரமசிவம், தலைமை காவலர்கள் தனபால், ஐய்யப்பன், துரைக்கண்ணு மற்றும் இளைஞர் காவல்படையை சேர்ந்த மகாலிங்கம், ஜான் ரவி ஆகிய ஆறு பேரையும் ராமநாதபுரம் ஆயுத படைக்கு அதிரடியாக மாற்றம் செய்து ராமநாதபுரம் எஸ்.பி. மயில்வாகணன் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவுப்படி சுட்டுக் கொல்லப்பட்ட சையது முகமதுவின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது.