தமிழகத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கொடி அணிவகுப்பு நடத்தும் போலீஸ்
நெல்லை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர். அதில் தமிழக காவல்துறை,மத்திய பாதுகாப்பு படை, ஆகியோர் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
தமிழகம், புதுச்சேரியில் வருகிற 24-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை விளக்கும் வகையிலும் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம்.
வால்பாறையில் அணிவகுப்பு
இதன்படி நேற்று மாலை வால்பாறையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.இதற்கு வால்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல் தலைமை தாங்கினார். இந்த அணிவகுப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், கோவை ஆயுதப்படை போலீசார், உள்ளூர் போலீசார், சிறப்பு இளைஞர் பாதுகாப்பு படையினர், ஊர்காவல் படையினர் என 200 பேர் கலந்துகொண்டனர். போலீசாரின் கொடி அணிவகுப்பு வால்பாறையில் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.
கும்பகோணத்தில் அணிவகுப்பு
தேர்தலை முன்னிட்டு கும்பகோணத்தில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பில் சென்றனர். அதில் தமிழக காவல்துறை,மத்திய பாதுகாப்பு படை,கர்நாடக போலீஸ் ஆகியோர் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
சாத்தூரில் அணிவகுப்பு
சாத்தூரில் நேற்று மாலை4.30 மணிக்கு, டி.எஸ்.பி. அறிவானந்தம் தலைமையில், போலீஸ்கொடியணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. டி.எஸ்.பி., அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலம், மெயின்ரோடு, வெள்ளக்கரைரோடு, பைபாஸ் ரோடு மற்றும் முக்கியவீதிகள் வழியாக , மீண்டு டி.எஸ்.பி., அலுவலகத்தை அடைந்தது. இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், ஆயுதம் ஏந்திய மத்திய அதிரடிபடை, மாநில அதிரடி போலீசார் மற்றும் இளைஞர் காவல்படையினர் உட்பட 350க்கு மேற்பட்டோர், ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
நெல்லையில் துணை ராணுவப்படை
நெல்லையில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 11 கம்பெனி துணை ராணுவ படை ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு இன்ஸ்பெக்டர், 4 எஸ்ஐக்கள், 85 பேர் அடங்கிய ஒரு கம்பெனி துணை ராணுவ படையினர் ஏற்கனவே சேர்மகாதேவியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கொடி அணிவகுப்பு
இவர்கள் நெல்லை மாவட்டத்தில் முன்னீர்பள்ளம், கோபாலசமுத்திரம், சுத்தமல்லி, வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி, சங்கரன்கோவில், புளியங்குடி, ஆலங்குளம், தென்காசி மற்றும் நெல்லை மாநகரத்தில் பேட்டை, நெல்லை சந்திப்பு, தச்சநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
கேரளா சிறப்பு பாதுகாப்பு படை
இந்த நிலையில் சென்னையில் இருந்து கேரள சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் 265 பேர் நவீன ரக துப்பாக்கிகளுடன் சிறப்பு ரயிலில் நெல்லைக்கு வந்துள்ளனர்.
தேர்தல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக நெல்லை மாநகரத்திற்கு 89 பேரும், நாகர்கோவிலுக்கு 89 பேரும், குளச்சல் பகுதிக்கு 87 பேருமாக பிரித்து அனுப்பப்பட்டனர். அந்த பகுதியில் உள்ள உள்ளூர் போலீசாருடன் இணைந்து இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீஸ் படை குவிப்பு
இவர்கள் தவிர கேரள சிறப்பு பாதுகாப்பு படை போலீசார் 400 பேர், மத்திய துணை ராணுவ படையினர் 500 பேர், நெல்லை இன்னும் ஒரிரு நாளில் வர இருப்பதாக போலீஸ் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.