மேயர் தேர்தல் எதிரொலி : வ.உ.சி.,மணிமண்டபத்திற்கு வரிந்து கட்டி ஓடிய எம்.பி.க்கள்
நெல்லை: நெல்லை மாநகராட்சிக்கு தேர்தல் வர உள்ளதை அடுத்து செக்கிழுத்த செம்மல் வ.உ.சி மணிமண்டபத்தின் பக்கம் அரசியல்வாதிகளின் பார்வை திரும்பியுள்ளது.
நெல்லை மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிரே வ.உ.சிதம்பரனாருக்கு மணிமண்டபம் உள்ளது. இந்த மணிமண்டபம் 2005ல் துவக்கப்பட்டது.
இந்த மணிமண்டபத்தில் வ.ஊ.சிதம்பரனாரின் முழு உருவ வெண்கலசிலை, சிறையில் அவர் இழுத்த கல் செக்கின் மாதிரி, நூலகம், பூங்கா ஆகியன உள்ளன.
கடந்த அ.தி.மு.க.,ஆட்சிக்காலத்தில் முதல்வர் திறந்து வைத்த வ.உ.சி.,மணிமண்டபம் சமீபகாலமாக முறையாக பராமரிக்கப்படவில்லை பூங்கா மற்றும் சிறுவர்கள் விளையாட்டு சாதனங்களும் உடைந்து கிடக்கின்றன.
பூங்காவிற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள வளைவுகளில் சினிமா, அரசியல் போஸ்டர் ஒட்டப்பட்டு காணப்படுகிறது. நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த விஜிலா சத்யானந்த், ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டதால் தற்போது மேயர் பணியிடம் காலியாக உள்ளது.
விரைவில் மாநகராட்சிக்கு தேர்தல் வர உள்ளதால் பெரும்பான்மையாக வசிக்கும் மக்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக தற்போது மீண்டும் வ.உ.சி.,யின் மீது அரசியல்வாதிகளின் கருணை பார்வை படத்துவங்கியுள்ளது.
அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வ.உ.சி.பிறந்த தினம் வருகிறது. மாநகராட்சி மேயர் தேர்தல் வருவதால், சிதம்பரனார் மணிமண்டபத்திற்கு நெல்லை எம்.பி.,பிரபாகரன், மாநிலங்களை உறுப்பினர்கள் முத்துகருப்பன், விஜிலா, துணைமேயர் ஜெகநாதன் உள்ளிட்டவர்கள் வ.உ.சி.மணிமண்டபத்தை பார்வையிட்டனர். உரிய வசதிகளை விரைவில் செய்து தருவதாக உறுதியளித்தனர்.