சோ. அய்யருக்கு தகுதியே இல்லை.. பொன். ராதாகிருஷ்ணன் விளாசல்!
தூத்துக்குடி: தமிழகத் தேர்தல் ஆணையராக பதவி வகிக்க எவ்விதத்திலும் தகுதியற்றவர் சோ.அய்யர் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவிற்கு போட்டியிட்ட பாரதீய ஜனதா வேட்பாளர் ஜெயலட்சுமி அதிமுகவினரால் தாக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமைதிக்கப்பட்ட ஜெயலட்சுமியை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து நலம் விசாரித்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொ.ராதாகிருஷ்ணன், பாரதீய ஜனதா கட்சியின் தூத்துக்குடி மேயர் வேட்பாளர் ஜெயலட்சுமியை அதிமுகவை சேர்ந்த செண்பகசெல்வன் தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் உள்ளிட்ட சிலர் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
தமிழகத்தில் கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாரதீய ஜனதா கட்சியினர் தாக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட தூத்துக்குடி பாரதீய ஜனதா வேட்பாளர் ஜெயலட்சுமிக்கு தற்போதுவரை பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை.
தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்களை தாக்கிய அதிமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். ஆனால் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வராது என்பது என்னுடைய கருத்து.
தமிழகத்தில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தியிருக்க தேவையில்லை. தமிழக அரசு உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலை நடத்தாமல் உரியப்பதவிகளுக்காக தேர்ந்தெடுத்து இருக்கலாம். இது மிகப்பெரிய ஜனநாயகப்படுகொலை.
இந்த தேர்தலில் தேர்தல் ஆணையர் மரியாதைக்குரிய சோ.அய்யர் இந்தப்பதவிற்கு எந்தவகையிலும் தகுதியற்றவராக இருந்துள்ளார் என்று அவர் கூறினார்.