தனி ராஜ்யம்' நடத்துகிறார் ஆளுநர்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான மாநில தகுதி' என பேராசிரியர் மு. ராமதாஸ் எழுதிய நூல் வெளியீட்டு விழா காரைக்காலில் நேற்று நடைபெற்றது.
இந்நூலை வெளியிட்டு புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி பேசியதாவது:
மாநில அந்தஸ்துக்கான அவசியம், தேவையா, கேட்டால் கிடைக்குமா, இதனால் நிதி பிரச்னை தீருமா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடைகாணும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால்தான் எதையும் நிறைவேற்ற முடியும். மாநிலம் வளர்ச்சி பெறும். ஆனால், எதற்கெடுத்தாலும் மத்திய அரசு தடை போட்டுக் கொண்டே இருக்கிறது.
வெள்ளைக்காரர்களிடமிருந்து நாம் விடுதலை பெற்றோம், மத்திய ஆட்சியிடமிருந்து நாம் விடுதலை பெற போராடிக் கொண்டிருக்கிறோம். மாநில அந்தஸ்து கிடைத்துவிட்டால், மக்களின் பிரச்னைகளுக்கு நாமே தீர்வு காண முடியும்.
மக்களின் நலன் கருதி ஒரு முடிவு எடுத்து கோப்புகளை அனுப்பினால், மத்தியில் உள்ள செயலர்கள் அதை திருப்பி அனுப்புகிறார்கள். அப்படியானால் புதுச்சேரியில் சட்டசபை எதற்கு? முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் எதற்கு?
இதுபோலவே அரசு அனுப்பும் கோப்புகளை துணை நிலை ஆளுநர் கட்டாரியா திருப்பி அனுப்புகிறார். இதுபோன்று நாட்டில் வேறு எந்த மாநிலத்திலாவது நடக்குமா? இது மக்களுக்கு இழைக்கப்படும் அநியாயம் இல்லையா?
2006-ம் ஆண்டு காரைக்காலில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட முடிவு செய்தேன். புதுச்சேரி அரசே அதை கட்டும் என்றேன். இதற்கான கோப்பை அனுப்பினால், அதை நிறுத்திவிட்டனர். பின்னர், ஓஎன்ஜிசி நிதியுதவி செய்யும் என்கின்றனர். இதுதொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநரோ முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் இல்லாத கூட்டத்தை கூட்டி விவாதிக்கிறார்.
துணை நிலை ஆளுநர் அவரது உறவினருக்கு முதலமைச்சரின் ஒப்புதலின்றி வேலை தருகிறார். ஒரு அதிகாரியை அரசால் பணியிட மாற்றம் செய்ய முடியவில்லை. அரசின் முடிவுகளில் துணை நிலை ஆளுநர் தலையிடுகிறார். தனி ராஜ்யம் நடத்துகிறார்.
இவ்வாறு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசினார்.