ஏழைகளுக்கு இனி ரயில் பயணம் சாத்தியமா?... ஏ.சி பெட்டிகள் இணைப்பு தற்காலிகமா? நிரந்தரமா?
சென்னை: ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதிகொண்ட பெட்டிகளுக்கு பதிலாக 3 அடுக்கு ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.
ரயில்வே துறையின் இந்த நடவடிக்கை ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சாமான்ய மக்கள் பயணம் செய்ய இனி ரயில்பயணம் சாத்தியமாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ரயில் பயணம் எளிதாகவும் அதிக செலவில்லாமலும் இருந்த நிலையில், ரயில்வே துறையின் புதிய நடவடிக்கையால் இனி அதிக பணம் கொடுத்து பயணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் சாமானிய மக்கள்.
சேரன், நவஜீவன் ரயில்கள்
தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் சேரன், நவஜீவன் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள ஒரு 2 அடுக்கு தூங்கும் வசதிகொண்ட முன்பதிவு பெட்டிக்கு பதில் 3 அடுக்கு ஏசிப்பெட்டியை ரயில்வே மாற்றியுள்ளது.
மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்
இவை தவிர, சென்னை எழும்பூர் - திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலிலும், சென்னை எழும்பூர் - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் 2ம் வகுப்பு தூங்கும் வசதிகொண்ட முன்பதிவு பெட்டிக்கு பதிலாக தலா ஒரு 2ம் வகுப்பு உட்காரும் வசதிகொண்ட முன்பதிவு பெட்டி இணைக்கப்படுகின்றன. இந்த மாற்றங்கள் 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை செய்யப்படும். இவை, திருச்சி, சேலம், திருவனந்தபுரம், அகமதாபாத் கோட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன.
தெற்கு ரயில்வேயில் மட்டும்
நாட்டிலேயே தெற்கு ரயில்வே இயக்கும் ரயில்களில் மட்டும் இப்படி 2ம் வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்டிருப்பது நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இயக்கப்படும் ரயில்கள் போதுமானதாக இல்லாத நிலையில் இருக்கும் ரயில்களில் ரயில்வே செய்யும் மாற்றங்கள் பயணிகளை மேலும் அல்லலுக்கு ஆளாக்கியுள்ளது.
ஏசி பெட்டிகள் ஏன்?
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டதற்கு, இது தற்காலிக நடவடிக்கைதான். தட்கல் முன்பதிவுக்கு பயன்படுத்தப்படும் பெட்டிகள் மட்டுமே மாற்றப்படுகின்றன.
இப்போது விடுமுறை, விழா காலங்கள் இல்லை என்பதால் தட்கல் பெட்டிகளுக்கு வரவேற்பு இல்லை. எனவே அந்த பெட்டிகளுக்கு பதில் ஏசி பெட்டிகளை சேரன், நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மட்டும் சேர்க்கிறோம். அதேபோல் மங்களூர், சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உட்காரும் வசதிகொண்ட முன்பதிவு பெட்டியை சேர்க்கிறோம். அதன் மூலம் கூடுதல் எண்ணிக்கையில் பயணிகள் செல்ல முடியும். அதாவது, 2ம் வகுப்பு தூங்கும் வசதிகொண்ட பெட்டியில் 72 பேர் மட்டுமே பயணிக்க முடியும். ஆனால் உட்காரும் வசதி கொண்ட பெட்டியில் 108 பேர் பயணிக்க முடியும்.
தட்கல் பெட்டிகளுக்கு பதில்
சேரன், நவஜீவன், சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தட்கல் பெட்டியான எஸ் 2 பெட்டியும், மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இங்கிருந்து செல்லும் போது தட்கல் பெட்டியாக உள்ள எஸ் 7 பெட்டியும், அங்கிருந்து வரும்போது தட்கல் பெட்டியான எஸ் 9 பெட்டியும் அகற்றப்பட்டு புதிதாக சேர்க்கப்பட்ட பெட்டிகள் இணைக்கப்படும். அதனால் ஏற்கனவே உள்ள பெட்டிகளின் எண்ணிக்கை குறையாது என்கின்றனர்.
காத்திருப்போர் அதிகம்
எற்கனவே 2ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட முன்பதிவு பெட்டிகளில் பயணிக்க முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் நூற்றுக்கணக்கானவர்கள் காத்திருக்கும் போது தட்கலுக்கு ஆள் இல்லை என்று பெட்டியை மாற்றுவதற்கு பதில் காத்திருப்பவர்களுக்கு இடம் ஒதுக்கி தரலாமே என்று கேட்டதற்கு, ரயில்வே அமைச்சகம் சொல்வதைத்தான் நாங்கள் செய்கிறோம். வேறு எதுவும் எங்களுக்கு தெரியாது என்றனர்.
தனியார் போல செயல்படலாமா?
ரயில்வே சேவை நோக்கில் இருந்து தடம் புரண்டு விட்டது. தனியார் நிறுவனங்களை போன்று லாபத்தை இலக்காக கொண்டு நடவடிக்கைகளை எடுக்கிறது. பயணிகளின் நலனில் அக்கறையில்லை. ஏற்கனவே பட்ஜெட்டுக்கு முன்பே கட்டண உயர்வு, கால அட்டவணை வெளியிடுவதற்கு முன்பே எக்ஸ்பிரஸ் ரயில்களை சூப்பர் பாஸ்ட் ரயில்களாக்கி கட்டணம் அதிகரிப்பு என்று பயணிகளை வாட்டும் நிலையில் ரயில்வே மீண்டும் பெட்டிகளை மாற்றி மீண்டும் மறைமுக கட்டணங்களை அதிகரித்துள்ளது என்று குற்றம் சாட்டுகின்றனர் பயணிகள்
தட்கல் பெட்டி நீக்கம் தற்காலிகமா?
தட்கல் முன்பதிவுக்கான பெட்டிகள் மட்டும் நீக்கப்பட்டு ஏசி பெட்டிகள் சேர்க்கப்பட்டிருப்பது தற்காலிகமானது என்று ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் மங்களூர், சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கான தட்கல் முன்பதிவு 2 மாதங்களுக்கு செப்டம்பர் 29ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது மேலும் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.
அதிகாரிகள் கருத்து
சேரன், நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 2ம் வகுப்புக்கான தட்கல் முன்பதிவு பயன்பாட்டில் உள்ளது. விழாக்காலம் இல்லை என்பதால் தட்கல் முன்பதிவுக்கான பெட்டி மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.
பற்றாக்குறை நிலை
தூங்கும் வசதியுள்ள ரயில் பெட்டிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதன் காரணமாகதான் ஒரு சில ரயில்களில் 2ம் வகுப்பு பெட்டிகளுக்கு பதிலாக 3ம் வகப்பு ஏசி பெட்டிகள் இணைக்கப்பட்டது. இது தற்காலிகமான நடவடிக்கைதான். 2ம் வகுப்பு புதிய ரயில் பெட்டிகள் வந்தவுடன் இந்த நடவடிக்கை கை விடப்படும். 2ம் வகுப்பு தூங்கும் வசதியுள்ள ரயில் பெட்டிகளை முழுமையாக அகற்றி விட்டு 3ம் வகுப்பு ஏசி பெட்டிகளை இணைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்கிறார் தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் மகேஷ்.
பகல் நேர ரயிலில் தூங்கும் வசதி பெட்டி
சென்னை எழும்பூர் - திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் பகல் நேர ரயிலாகும். இந்த ரயிலில் 10 தூங்கும் வசதி கொண்ட 2ம் வகுப்பு பெட்டிகள் உள்ளன. பகல் நேர ரயிலில் இந்த பெட்டிகள் இணைக்கப்பட்டிருப்பது தேவையற்றது. பகலில் படுக்கைகளை யாரும் பயன்படுத்த போவதில்லை. இருந்தும் தேவையில்லாமல் 10 பெட்டிகளை இணைத்து உட்கார்ந்து செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். அதில் ஒரு பெட்டியைதான் அகற்றிவிட்டு உட்காரும் வசதி கொண்ட முன்பதிவு பெட்டியை இணைக்கின்றனர். அதன் மூலம் உட்காரும் வசதிகொண்ட 2ம்வகுப்பு முன்பதிவு பெட்டிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலை நிரந்தரமா? தற்காலிகமா?
சாதாரண மக்கள் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் கரப்பான்பூச்சிகளோடும், எலிகளோடும் பயணித்து ஒருவழியாக ஊர்போய் சேர்ந்து விடுவார்கள். இதற்கு குறைந்த அளவுதான் பணம் செலவாகும். ரயில்வே துறையை நவீனப் படுத்துகிறோம் என்று கூறி வருமானத்தை அதிகரிக்க எல்லா பெட்டிகளையும் ஏசி பெட்டிகளாக மாற்றினால் சாதாரண மக்களின் பயணம் இனி சங்கடத்திற்கு உரியதாகவே மாறிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.