கட்டாய இந்தித் திணிப்புக்கு புரட்சி பாரதம் கடும் கண்டனம்
சென்னை: தமிழக பல்கலைக்கழகங்களில் இந்தி மொழியை கட்டாயமாக திணிப்பதற்கு புரட்சி பாரதம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பல்கலைகழகத்தில் ஆங்கிலத்துடன் இந்தியை முதன்மை மொழியாக கற்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தது.
தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைகழகத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு அதில் இளங்கலை பட்டப்படிப்புகளில் இந்தி மொழியையும் முதன்மை பாடமாக கற்பிக்கும் படியும் சட்டம், வணிகவியல் படிப்புகளில் கட்டாயமாக கற்பிக்க வேண்டும் என்று யுஜிசி கூறியதை புரட்சி பாரதம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழ் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இந்த சுற்றறிக்கை பொருந்தாது என்று சொன்ன மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை புரட்சி பாரதம் மனதார பாராட்டுகிறது. தமிழகத்தில் இந்தி திணிக்கும் முயற்சியை முறியடிக்க போராடும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் சீரிய பணிக்கு என்றென்றும் புரட்சி பாரதம் துணை நிற்கும்.தொன்மை வாய்ந்த தாய் மொழியாம் தமிழ் மொழியை காக்க அனைத்து வழிகளிலும் புரட்சி பாரதம் போராடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.