தேர்தல் முடிந்தது.. ஆரம்பித்தது 'பவர் கட்'.. ஆங்காங்கு போராட்டத்தில் குதிக்கும் மக்கள்
நெல்லை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் வாக்கு பதிவு நாள் வரை மின் வெட்டு தலை காட்டவில்லை. தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில் அறிவிக்கப்படாத மின் வெட்டு தலை தூக்க ஆரம்பித்துள்ளது. பல பகுதிகளிலும் கரண்ட்டைக் காணவில்லை.. மக்கள் போராட்டங்களில் குதிக்க ஆரம்பித்துள்ளனர்.
தமிழகத்தில் தீர்க்க முடியாத பிரச்சனையாக மின் வெட்டு இருந்து வருகிறது.
இதில் கோடை காலத்தில் ஏற்படும் மின் வெட்டால் தொழில் அனைத்தும் முடங்க தொடங்கி விடுவதால் பொதுமக்களும் தொழிலாளர்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
2 மாதங்களுக்கு முன்பு ஓவர் மின்வெட்டு
கடந்த இரண்டு மாதங்களாக அதிக மின் வெட்டு இருந்து வந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
தேர்தல் வந்ததால் மட்டுப்பட்டது
ஆனால் தேர்தல் நெருங்கி வந்ததால் ஆளும்கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதனால் வெளி மாநிலங்களில் இருநது தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கி நிலைமையை மின்சாரம் சமாளித்தது.
தனியாரிடமிருந்து கொள்முதல்
ஒரு சில நாட்களுக்கு முன்பு 1030 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. தேர்தல் நாளில் மட்டும் 1075 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது.
உற்பத்தி குறைந்தது.. பற்றாக்குறை அதிகரித்தது
இதனால் குடியிருப்புகளுக்கு அதிக அளவில் மின்தடை ஏற்படவில்லை. தற்போது 12700 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் உற்பத்தியோ 11000 என்ற அளவில் இருப்பதால் சுமார் 1500 மெகா வாட் வரை பற்றாக்குறை இருந்து வருகிறது.
தனியார் மின்சாரம் குறைந்தது
இந்த நிலையில் தேர்தல் முடிந்த உடன் தனியாரிடம் இருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் அளவை உடனே குறைந்து விட்டனர். இதனால் கூடுதல் பற்றாக்குறை ஏற்பட்டது.
நெல்லையில் கடும் தொல்லை
நெல்லை மாவட்டத்தில் பல பகுதிகளில் காலை 6 மணி முதல் 8 மணி வரையும் நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரையும் நேற்று மின்தடை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தொழிற்சாலைகள் பாதிப்பு
தொழிற் கூடங்கள் பலவும் வழக்கத்தை போல மின்சாரம் தடை செய்யப்பட்டவுடன் இழுத்து மூடி விட்டு செல்கின்றனர். தேர்தலுக்கு பின் பல மணி நேரம் மின் வெட்டு அமுலில் இருக்க தொடங்கி விட்டதால் பொதுமக்கள் விழி பிதுங்கி போய் உள்ளனர்.
மந்தமான காற்றாலைகள்
தமிழகத்தில் காற்றாலை உற்பத்தி தொடர்ந்து மந்தமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை வரை 1050 மெகா வாட் வரை காற்றாலை மூலம் மின்சாரம் கிடைத்ததால் மின் வாரியத்தினர் நி்ம்மதி பெருமூச்சு விட்டனர்.
தொடருமா...
ஆனால் இது தொடர்ந்து நீடிக்குமா என்பது கேள்விகுறியாக இருக்கிறது. என்ன செய்ய போகிறது அரசு......
போராட்டங்களில் மக்கள்
கரூர் மாவட்டத்தில் உள்ள காந்திகிராமத்தில் டிரான்ஸ்பார்ம் பழுதானது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் நாள் முழுவதும் மின்சாரம் வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மின்வெட்டை கண்டித்து கரூர் திருச்சி சாலையில் நள்ளிரவில் சாலை மறியல் செய்தனர்.
தேர்தல் முடிந்ததும் கட் செய்து விட்டனர்
பொதுமக்கள் கூறுகையில், லோக்சபாத் தேர்தலின்ன்போது மின்வெட்டு
குறைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் மின்வெட்டு நேரம் அதிகமாகிவிட்டது.
கரண்ட் திருடர்களைத் தண்டியுங்கள்
இங்கு திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை என்றனர்.