மின்தடை: ரயில்கள் தாமதத்தால் மக்கள் அவதி
சென்னை: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட பல்வேறு ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இன்று காலை திடீர் மின்தடை ஏற்பட்டது. இதனால் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் முத்துநகர், அனந்தபுரி உள்ளிட்ட விரைவு ரயில்கள் சிக்னல் கிடைக்காமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதே போன்று செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்களின் சேவையும் பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக அலுவலகம் செல்வோர், மாணவர்கள் மற்றும் வெளியூரிலிருந்து சென்னை திரும்புபவர்கள் என வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
நீண்ட நேரமாகியும் மின்தடை முழுமையாக சரி செய்யப்படாத போதும், அந்த வழித் தடத்தில் ரயில்கள் தாமதமாக இயக்கப் பட்டு வருகின்றன. அச்சரப்பாக்கத்தில் ஏற்பட்ட மின்கோளாறு காரணமாகவே இந்த மின் தடைப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலைக்குள் இப்பிரச்சினை சரி செய்யப்பட்டு ரயில்கள் மீண்டும் வழக்கம் போல் இயக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று ரயில்வே வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.