பராமரிப்பு பணி... கூடங்குளத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்: ‘மின்தடை’ பயத்தில் மக்கள்!
நெல்லை: கூடங்குளம் அணு உலையில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தியை ஒரு மாதம் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மின் வெட்டு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்திய-ரஷ்யா கூட்டு முயற்சியில் 13 ஆயிரம் கோடி முதலீட்டில் 1000 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் அணு உலையில் பணிகள் நிறைவடைந்ததால் அணு சக்தி ஒழுங்கு முறை வாரியம் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி மின் உற்பத்தி தொடங்க அனுமதி அளித்தது.
மின் உற்பத்தி...
இதை தொடர்ந்து ஜூலை 13ம் தேதி முதல் அணு உலை பிளவுக்கு உட்படுத்தப்பட்டது. பின்னர் அக்டோபர் 22ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு கூடங்குளம் அணு உலையில் 160 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.
கண்காணிப்பு...
தொடர்ந்து மின் உற்பத்தி அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது. இதை ரஷ்ய-இந்திய அணு விஞ்ஞானிகள் கண்காணித்து வந்தனர்.
உயர்வு....
கடந்த ஜனவரி 26ம் தேதி முதல் அணு உலையில் 570 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் மே 5ம் தேதி மின் உற்பத்தி 900 மெகா வாட்டை எட்டியது. பின்னர் 1000 மெகா வாட்டை எட்டுவதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்தன.
சாதனை...
ஜூன் 1ம் தேதி பிற்பகல் கூடங்குளம் அணு மின் நிலையம் 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்தது.
பரிசோதனை...
முழு அளவில் மின் உற்பத்தி தொடங்கிய போதிலும் அணு சக்தி ஓழுங்கு முறை வாரியம் தொடர்ந்து ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டு வந்தது. இதற்காக அவ்வப்போது அணு உலையை நிறுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வந்தன.
ஓராண்டு நிறைவு...
தற்போது முதல் அணு உலை இயக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆகி விட்டதால் பராமரிப்பு மற்றும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக முதல் அணு உலையை ஒரு மாதத்திற்கு நிறுத்தப்பட உள்ளது.
பராமரிப்புப் பணி...
இதுகுறித்து வாளக இயக்குனர் சுந்தர் கூறுகையில், முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கி ஒரு ஆண்டு முடிவடைந்து விட்டதால், ஒரு ஆண்டுக்குள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது சர்வதேச அணு சக்தி ஒழுங்கு முறை வாரியத்தின் விதி்முறையாகும்.
பரிசோதனை...
இதனால் முதல் அணு உலை ஒரு மாத காலத்திற்கு நிறுத்தப்பட்டு அணு உலை கட்டு மானத்தின் உறுதி, அழுத்த தன்மை ஆகியவை பரிசோதனை செய்யப்படும். இதற்காக ஒரிரு வாரத்தில் அணு உலை மின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.