ஜெயலலிதா பேசுவது சின்னப்புள்ளத்தனமாவுல்ல இருக்கு.. பிரேமலதா தாக்கு
கரூர்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு மக்கள் கரும்புள்ளி, செம்புள்ளி குததி நாட்டை விட்டே விரட்டியடிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.
கரூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போதுதான் இப்படிக் கோபமாக பேசினார் பிரேமலதா விஜயகாந்த்.
மேலும் தனது பிரசாரத்தின்போது மோடி பிரதமரானால் தமிழ்நாடு நல்லரசாகும், இந்தியா வல்லரசாகும் என்றும் அவர் பேசினார்.
கரூர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் என்.எஸ். கிருஷ்ணனை ஆதரித்து பாலவிடுதி, தரகம்பட்டி ஆகிய இடங்களில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.
அவரது பேச்சிலிருந்து...
5 முனை
மக்களவைத் தேர்தல் 5 முனை போட்டியில் நடைபெறுகிறது. கொஞ்சம் வித்தியாசத்தில் கூட வெற்றி, தோல்வி நிர்ணயிக்கும் நிலை உள்ளதால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
தம்பியை எடுத்து துரை ஆகி விட்டார்
இப்போதைய எம்.பி. தம்பிதுரை இந்தத் தொகுதிக்கு என்ன செய்தார். தம்பியை மட்டும் எடுத்துவிட்டு, தான் மட்டும் துரை மாதிரி ஆகிவிட்டார்.
இப்படி இருக்கக் கூடாது
ஒரு எம்.பி. எப்படி எல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு தம்பிதுரை உதாரணம்.
3 வருஷமாச்சு கரண்ட் எங்கே...
முதல்வர் ஜெயலலிதா 3 மாதத்தில் மின் தட்டுப்பாட்டை தீர்ப்பதாகக் கூறினார். 3 வருடமாகியும் இன்னும் தீர்ந்தபாடில்லை. மின் வெட்டால் கரூரில் தொழிற்சாலை முடங்கி லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழந்துவிட்டனர்.
டாஸ்மாக் மூலம்தான் நல்ல வளர்ச்சி
அமைதி, வளம், வளர்ச்சி என்கிறார் டாஸ்மாக் மூலம் 24 ஆயிரம் கோடி வருமானம் மட்டும்தான் வளர்ச்சி. இலவச திட்டங்களால் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
பாடம் புகட்டுங்கள்
அதிமுகவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். ஒவ்வொரு ஓட்டும் ஆளுங்கட்சிக்கான வேட்டு.
கரும்புள்ளி செம்புள்ளி குத்துங்கள்
உங்கள் ஓட்டுக்கள் மூலம் ஆளுங்கட்சிக்கு, திமுகவுக்கு கரும்புள்ளி செம்புள்ளி குத்தி இந்த நாட்டை விட்டே விரட்டி அடியுங்கள் என பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
திருப்பூரில்
பின்னர் திருப்பூர் தேமுதிக வேட்பாளர் என்.தினேஷ்குமாரை ஆதரித்து பங்களாபுதூர் பகுதியில் பிரேமலதா பிரச்சாரம் மேற்கொண்டார்.
கிடையாது.. கிடையாது.. கிடையாது...
24 மணி நேரமும் கரெண்ட் கிடையாது. குடிக்க தண்ணீர் கிடையாது. விவசாயத்திற்கு தண்ணீர் கிடையாது. இங்கே இருக்கிற சாயப்பட்டறைகளை மூடப்பட்டுவிட்டது. இன்று கஞ்சி தொட்டி திறக்கிற நிலைமை வந்துவிட்டது.
இருக்கா.. இருக்கா.. இருக்கா
ஒரு ரோடாவது சரியா இருக்கா. சாக்கடை வசதி இருக்கா. ஆஸ்பத்திரி வசதி இருக்கா. பஸ் ஸ்டாண்டு ஒழுங்கா இருக்கா. கழிப்பட வசதி இருக்கா.
ஒரே குப்பை கூளம்...
எங்கு பார்த்தாலும் குப்பை, கூளமாக இருக்கிறது. லஞ்சம் ஊழல் இதுதான் தமிழ்நாடு. ஜெயலலிதாவிடம் கேட்டால், எங்கள் ஆட்சி சாதனை ஆட்சி என்று சொல்கிறார்கள். சாதனை ஆட்சியா இங்கு நடந்துகிட்டு இருக்கு. வெட்கக் கேடு. வேதனை ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.
கதை விடும் ஜெயலலிதா
மின்வெட்டை சரி செய்யாமல் இருப்பதற்கு அந்த அம்மா ஜெயலலிதா புதுக்கதையை விடுகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் சதி நடக்கிறது என்கிறார்.
அதைக் கண்டுபிடிக்கவா இம்புடடு வருஷமாச்சு
சதி நடக்கிறது என்று கண்டுபிடிக்க உங்களுக்கு 3 வருடம் ஆயிடுச்சா. அப்ப என்ன நிர்வாகம் இங்கு நடக்கிறது.
சின்னப்புள்ளத்தனமா இருக்கே...
பிள்ளைகளை ஏன் தேர்வு நல்லா எழுதவில்லை என்று கேட்டால், அம்மா பென்சில் இல்ல, பென்சில் உடைஞ்சி போச்சு, ரப்பர் காணாமல் போயிடுச்சு, பேப்பர் கிழிஞ்சிருச்சு என சொல்வார்கள். அதுபோல இருக்கு ஜெயலலிதா மின்வெட்டுக்கு சொல்லும் பதில்.
திறமையே இல்லையே ஜெயலலிதாவிடம்
ஒரு நல்ல முதலமைச்சராக இருந்தால் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு நொண்டி சாக்கு சொல்கிறார்கள். மத்திய அரசு மீது பழிபோடுவது. கடந்த திமுக ஆட்சியின் மீது பழிபோடுவது. இப்போது சதி நடக்கிறது என்று பழி போடுகிறீர்களே. இது எதை குறிக்கிறது என்றால் ஜெயலலிதா அவர்களின் நிர்வாக திறமை இல்லாததை குறிக்கிறது. அவர்கள் தங்களது நிர்வாகத்தை சரியாக நடத்த முடியவில்லை.
நீங்க தோத்துட்டீங்க...
அதற்கான சான்றுதான் ஜெயலலிதா சதி நடக்கிறது என்று சொல்லுவது, தன்னுடைய ஆட்சி தோல்வி ஆட்சி என்று ஜெயலலிதா மின்வெட்டு பிரச்சனையை வைத்து நிரூபித்துவிட்டார் என்றார் அவர்.