கைதான மாணவர்களை விடுவியுங்கள்.. உள்ளிருப்புப் போராட்டத்தில் குதித்த மாநிலக் கல்லூரி மாணவர்கள்
சென்னை: மாணவர் பேரவை தேர்தல் தொடர்பான பிரச்சினையில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மாநிலக் கல்லூரியில் கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற மாணவர் பேரவை தேர்தல் தொடர்பான தகராறில் மாணவர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இதனை அடுத்து, கடந்த வியாழக்கிழமை மாநிலக் கல்லூரியில் மோதல்களுக்கு காரணமாக இருந்ததாக கூறி 4 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். மேலும் 8 பேர் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கல்லூரி முதல்வர் முகமது இப்ராகிம் வேலூர் கல்லூரிக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று காலை மாநில கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீக்கப்பட்ட மாணவர்களை சேர்க்க வேண்டும். மாணவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும்.
மோதலுக்கு வெளிநபர்களே காரணம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றப்பட்ட கல்லூரி முதல்வர் முகமது இப்ராகிம் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்.
கல்லூரி சுற்றுச்சுவரை உயர்த்தி கட்ட வேண்டும். கல்லூரியில் 175வது ஆண்டு விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்க நேரம் ஒதுக்கி தர வேண்டும். மடிக்கணினி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். போராட்டம் காரணமாக அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.