வெறிச்சோடிய தெருக்கள்….வாக்களிக்க காலையிலேயே நீண்ட வரிசை – இது புதுக்கோட்டை நிலவரம்
புதுக்கோட்டை: காலை எப்பொழுதும் போல்தான் விடிந்துள்ளது....பறவைகள்,மரங்களும் தங்கள் அன்றாட கடமையை செய்யத்தொடங்கிவிட்டன....ஆனால்,மனிதர்களாகிய நமக்கு மட்டும் இன்று ஒரு முக்கியமான கடமை காத்திருக்கின்றது.
அதுதான் "வாக்குப்பதிவு"...கட்சிகள், ஆட்சியையும் தாண்டிய ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இந்திய குடிமகன் என்று பெருமிதம் கொள்ளச் செய்யும் ஒரு முக்கிய நாள்.
ஒரு சொட்டு மையில் நாட்டின் ஆட்சியையே தீர்மானிக்கும் மாயாஜாலம் இன்றுதான் நடக்க இருக்கின்றது.
அதனைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்தான் இங்கே உங்களுக்காக.
தொடங்கிய வாக்குப் பதிவு:
காலை 7 மணிக்கே புதுக்கோட்டையின் சுற்றுப்புற கிராமங்களிலும் வாக்குப்பதிவு துவங்கி விட்டது.ஆனால்,4 மணிக்கே வாக்களிக்க பேருந்துகளில் புறப்பட்ட மக்களைப் பரவாலாக பார்க்க முடிந்தது.
பெண்களும் சளைக்கவில்லை:
ஆண்களும், கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மட்டும் அல்லாமல் கிராமப் புற பெண்களும் அந்தக் காலை நேரத்திலேயே தங்களது முக்கியத்துவம் வாய்ந்த ஜனநாயக கடமையை சரியாக செய்ய வரிசையில் நின்றது ஆச்சரியத்தை உண்டாக்கியது.இதன் மூலம் கிராமப்புற மக்களிடம் ஆட்சிப் பற்றிய தெளிவான எண்ணம் உண்டாகி இருப்பதையே இது பறை சாற்றியது.
வாக்குப் பதிவு முறை:
வாக்குப் பதிவு அறைக்கு வெளியில் காணப்படும் வரிசையில் இருந்து ஒரு ஆண், ஒரு பெண் என்று உள்ளே அனுப்பப் படுகின்றார்கள்.அவர்களுடைய "பூத் சிலிப்" இல் வரிசை எண் குறிக்கப் பட்டுள்ளது.கட்சிகளின் பிரதிநிதிகளாக அமர்ந்திருப்பவர்கள் நமது பெயரை உறுதி செய்கிறார்கள்.
ஜனநாயக கடமை:
பின்பு, இரண்டாவது அதிகாரி ஒரு அட்டவணையில் "எபிக் " என்று குறித்து நமது கையெழுத்தைப் பெறுகின்றார்.பின்பு, வாக்குப் பதிவு இயந்திரம் இயக்கப்பட்டு, தனி இடத்தில் நம்மால் வாக்கு பதிவு செய்யப் படுகின்றது.
நோட்டா பட்டன்:
இந்த முறை நோட்டாவிற்கான பட்டன் கடைசியில் வடிவமைக்கப் பட்டுள்ளது."யாருக்கும் வாக்களிக்க எனக்கு விருப்பமில்லை" என்று தமிழ் எழுத்துகள் அதில் பொறிக்கப் பட்டுள்ளன.
அமைதியான புதுகை:
புதுக்கோட்டையைப் பொறுத்த வரை காலையிலேயே தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.பரபரப்பான கடைவீதி கூட இன்று மிகுந்த அமைதியாகதான் இருந்தது.முக்கிய வாக்குச்சாவடியான புதுக்கோட்டை "முனிசிபல் அலுவலகம்" காவல் நிலையத்தின் அருகில் அமைந்திருப்பதால் வாக்குபதிவு அமைதியாகதான் நடைபெற்று வருகின்றது.
பெண் காவலர்கள்:
மேலும், பாதுகாப்பு பணியில் அதிக அளவில் பெண் காவலர்கள்தான் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.சிலருக்கு இரண்டு பூத் சிலிப்கள், வரிசை எண்கள் அளிக்கப்பட்டதால் சிற்சில குழப்பங்கள் ஏற்பட்டன.
ஓட்டை விற்காதே:
வாக்களிப்பதை ஜனநாயக கடமை, ஓட்டுகள் விற்பனைக்கல்ல என்பதையெல்லாம் குறிக்கும் வகையில் அங்கங்கு விளம்பர பேனர்கள் வைக்கப் பட்டுள்ளன.கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வரிசையில் நின்று வாக்களிக்க குவிந்து வருகின்றனர்.
எதிரொலிக்கும் குமுறல்:
ஒருகாலத்திம் எம்பி தொகுதியாக இருந்த புதுக்கோட்டை, திருச்சி மண்டலத்துடன் இணைக்கப் பட்டதால் அதிக அளவிலான மக்களின் மனநிலையில் நோட்டா ஓட்டு எதிரொலிப்பதை அவர்களின் வார்த்தைகள் மூலம் அறிய முடிந்தது.