”எம்.பி. தொகுதியைப் பறித்ததால் எல்லா ஓட்டும் நோட்டோக்குதான்” குமுறும் புதுக்கோட்டை மக்கள்
புதுக்கோட்டை: வரும் தேர்தலில் நோட்டோ உரிமையைப் பயன்படுத்தத் தயாராகி வருகிறார்கள் புதுக்கோட்டை மாவட்ட மக்கள்
இழந்த புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியை மீட்டெடுக்கும் வகையில் நோட்டோ உரிமையை பயன்படுத்த புதுக்கோட்டை மாவட்ட மக்கள் தயாராகி வருகின்றனர்.
இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் கலக்கத்தில் உள்ளனர்.
சமஸ்தானத்தை சாய்த்த அரசியல் சதி;
புதுக்கோட்டை சமஸ்தானம் 1948 இல் இந்தியாவுடன் இணைந்தது முதலே தனி நாடாளுமன்ற தொகுதியாக 2009 ஆம் ஆண்டு வரை இருந்து வந்தது. ஆனால், மக்களின் கருத்தறியாமல் அரசியல் சதி காரணமாக புதுக்கோட்டைத் தொகுதி நீக்கப்பட்டது.
நாட்டை திரும்பி பார்க்க வைத்தவர்கள்:
இதையடுத்து நடைபெற்ற கடந்த மக்களவைத் தேர்தலில் இந்தியத் தேர்தல் வரலாற்றில் முன் எப்போது நடந்திராத வகையில் புதுக்கோட்டை தொகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மாவட்ட மக்கள் வெகுண்டெழுந்தனர். தங்களது கோபத்தை 49 -ஓ என்ற பிரிவில் நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் 13,457 வாக்குகளை பதிவு செய்தனர்.
தோற்ற வேட்பாளர்:
அந்தத்தேர்தலில் போட்டியிட்ட தேசியக் கட்சியின் வேட்பாளரி்ன் தோல்விக்கு இந்த 49 -ஓ பிரிவுக்கு விழுந்த வாக்குகள்தான் முக்கியக் காரணமாக அமைந்தாக அவரே ஒவ்வொரு கூட்டத்திலும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் என்பது தனிக்கதை.
நோட்டோ பொத்தான்:
ஆனால், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி தற்போது நேட்டோ எனப்படும் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற பிரிவுக்கு தனி பொத்தான் வசதியை வாக்குப்பதிவு இயந்திரத்தில் தோ்தல் ஆணையம் அமைத்துள்ளது.
மறு வரையறை குழு:
2014 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தோ்தல் முடிந்த ஓராண்டுக்குள் தொகுதி மறு வரையறைக் குழு அமைக்கப்பட்டு விடும் என மத்திய தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒப்புதல்:
அக்குழுவினர் நாடு முழுவதும் 2 ஆண்டுகளுக்கு பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு அதனடிப்படையில் அடுத்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு பல தரப்பில் கருத்து கேட்பு கூட்டங்கள் மற்றும் பரிந்துரை அடிப்படையில் ஒரு சிலவற்றை மறு ஆய்வு செய்து மீண்டும் தேர்தல் ஆணையம், மத்திய அரசு, அமைச்சரவை பரிந்துரை மூலம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் தொகுதிகள் மறு வரையறை செய்யும் நடவடிக்கைகள் தொடங்கும்.
பதிவாகுமா பலத்த எதிர்ப்பு:
இந்நிலையில், வரும் 2018 -ல் புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி மீண்டும் கிடைக்க வழிகாணும் வகையில் 2014 -ல் நடைபெறும் தேர்தலில் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.
வரலாறு தெரியாமல் வஞ்சிக்க நினைப்பவர்கள்:
இந்நிலையில், மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவானது நிர்வாகக் காரணங்களுக்காக ஒவ்வொறு நாடாளுமன்றத் தொகுதியையும் மாவட்டத் தலைநகராக அறிவிக்க வேண்டுமென பரிந்துரைத்துள்ள செய்தி மாவட்ட மக்களை மேலும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.
தகுதியை பிடுங்கினால் பின் விளைவுகள் கடுமையாகும்:
இந்தப்பரிந்துரை மட்டும் நடைமுறைக்கு வந்துவிட்டால் புதுக்கோட்டை தனது மாவட்டம் என்ற தகுதியையும் இழக்கும் துர்பாக்கிய நிலை ஏற்படும்.
நோட்டோ ஆயுதம்:
இது போன்ற பல அபாயங்களையும் தடுக்கும் ஆயுதமாக நோட்டோவைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு மாற்று வழியில்லை என்ற உண்மையை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளதால் நீக்கப்பட்ட தொகுதி மீண்டும் கிடைக்கவும், தொகுதி மறு வரையறை குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், உச்சநீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் நோட்டோவில் வாக்களிக்கத் தயாராகி வருகின்றனராம்.
தொடரும்
அரசியல்வாதிகள் தங்கள் இஷ்டப்படி ஜனநாயக நாட்டை கூறுபோடவும், ஒட்டவைக்கவும் நினைத்தாலும் அவர்கள மீண்டும் மக்களிடம்தான் ஓட்டிற்காக கையேந்தி நிற்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளாதவரை இந்த கொந்தளிப்புகள் தொடரதான் செய்யும்.