என் வாக்கு என் உரிமை... மலேசியாவிலிருந்து வாக்களிக்கப் பறந்தோடி வந்த தமிழர்
புதுக்கோட்டை: வாக்களிப்பது நமது உரிமை. அதை எந்தக் காரணத்திற்காககவும் விட்டுக் கொடுக்கக் கூடாது. பல இந்தியர்களின் மனதில் இந்த வார்த்தை ஆணி அடித்தாற் போல இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் மலேசியாவிலிருந்து வந்து லோக்சபா தேர்தலில் ஓட்டுப் போட்டு தான் ஒரு உண்மையான ஜனநாயக குடிமகன் என்பதை நிரூபித்துள்ளார்.
மிகவும் பெருமிதத்தோடு அவர் தனது வாக்கை செலுத்தி ஜனநாயகக் கடமையை ஆற்றிய பெருமையுடன் வலம் வருகிறார்.
இவரது பெயர் பாரூக். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மங்களநாடு கிராமத்தைச் சேர்ந்தவர். மலேசியாவில் பணியாற்றி வருகிறார். தேர்தலில் பங்கேற்பதற்காகவே அவர் மலேசியாவிலிருந்து பறந்து வந்துள்ளார்.
2 முறை மலேசியாவிலிருந்து வந்தவர்
பாரூர்க், கடந்த 26-12-2013 அன்று விடுமுறைக்காக ஊர் வந்தார். விடுமுறை முடிந்ததாலும், விசா காலாவதியாகிவிடும் என்பதற்காக கடந்த 27-03-2014 அன்று மலேசியா புறப்பட்டு சென்று விட்டார்.
வாக்களிப்பதற்காகவே
தற்போது வாக்களிப்பதற்காகவே 22-04-14 அன்று திரும்பி வந்தார். வியாழன் அன்று தனது சொந்த ஊரில் அமைந்துள்ள வாக்குசாவடியில் நின்று முதலாவதாக தனது வாக்கினை பதிவு செய்தார்.
ஒருமுறை கூட மிஸ் ஆனதில்லை
இதுகுறித்து பாரூக் கூறுகையில், எனக்கு வாக்களிப்பதற்கான வயது வந்த காலம் தொட்டு வாக்களிக்காமல் இருந்ததில்லை. அது சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி அல்லது கிராம பஞ்சாயத்து தேர்தலாக இருந்தாலும் வாக்களிக்காமல் இருந்ததில்லை.
எங்கிருந்தாலும் வந்து விடுவேன்
நான் ஊரில் இருந்தாலும், வெளிநாட்டில் இருந்தாலும் ஓட்டுபோட தவறாமல் ஊர் வந்து விடுவேன்.
ஒரே ஒரு முறை மட்டும முடியாமல் போனது
ஒரு முறை மட்டுமே விடுமுறை கிடைக்காததால் ஊர் வரமுடியவில்லை. ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாக்களிக்க தவறக்கூடாது என்றார்.
பாரூக்கிடமிருந்து படித்த இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவே உள்ளது.