மக்கள் பிரச்சனையை பேச முடியல: சட்டசபையை புறக்கணித்த புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி
புதிய தமிழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இன்று சட்டசபை நிகழ்ச்சிகளை புறக்கணித்துள்ளன.
இந்நிலையில் இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறுகையில்,
சட்டசபையில் மக்கள் பிரச்சனையை பற்றி பேச போதிய நேரம் கொடுப்பதில்லை. இன்றைய கூட்டத்தில் நீலாங்கரை காவல் நிலையத்தில் முஸ்லிம் சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, செவிலியர் பயிற்சி மாணவிகளின் போராட்டம். கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராடுபவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது உள்ளிட்டவை பற்றி பேச இருந்தோம்.
ஆனால் முன்னதாக நான் பேசுகையில் 28 நிமிடங்கள் பேசியதாகவும், மேற்கொண்டு நேரம் ஒதுக்க முடியாது என்றும் கூறி எனக்கு பேச அனுமதி மறுத்துவிட்டனர். ஆனால் நான் வெறும் 12 நிமிடம் தான் பேசியிருந்திருப்பேன். அமைச்சர்களின் குறுக்கீடு அதிகம் உள்ளதால் எங்களுக்கு பேச அதிகமாக வாய்ப்பு கிடைப்பதில்லை.
முஸ்லிம்கள் இடஒதுக்கீடு, ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு உள்ளிட்டவை பற்றி விவாதிக்க முடியாததால் நாங்கள் இன்று சட்டசபை நிகழ்ச்சிகளை புறக்கணித்துவிட்டோம் என்றார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. கூறுகையில்,
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து ஆளுங்கட்சி உறுப்பினர் பேசுகையில், சம்பந்தமே இல்லாமல் அவையில் இல்லாதவர்களை பற்றி எல்லாம் பேசுகிறார். இதற்கு பதில் அளிக்க முயன்ற திமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் அவையை புறக்கணித்துள்ளனர். இதே போன்று தேமுதிகவும் அவையை புறக்கணித்துள்ளது.
சட்டசபையில் தங்கள் பிரச்சனைகள் பற்றி பேசப்பட வேணடும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் எங்களால் மக்கள் பிரச்சனைகள் பற்றி முழுமையாக பேச முடியவில்லை. அப்படியே பேசினால் உடனே அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடுகின்றனர். அதனால் தான் புதிய தமிழகம் இன்று அவையை புறக்கணித்துள்ளது என்றார்.