ரயில்வேயின் கால அட்டவணை இன்று வெளியீடு – ரயில்வே அமைச்சகம் தகவல்!
சென்னை: தெற்கு ரயில்வே, தென் மத்திய ரயில்வே, தென் மேற்கு ரயில்வே, கொங்கன் ரயில்வேக்களுக்கான கால அட்டவணை ஒரே புத்தகமாக இன்று வெளியிடப்பட உள்ளது.
அந்த அட்டவணையில் ரயில்களுக்கான வருகை, புறப்பாடு, நிற்கும் ரயில் நிலை யங்களின் விவரங்களுடன் அந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரயில்களின் வருகை, புறப்பாடு விவரங்களும், பயணிகளுக்கு தேவையான முன்பதிவு விவரங்கள் ஆகியவை இடம்பெறும்.
மேலும், ரத்து செய்வதற்கான வழிமுறைகள், குறைகள், பிரச்னைகள் குறித்து புகார் தெரிவிப்பதற்கான முகவரிகள், பயணச்சலுகை விவரங்கள், தங்குமிடம் உள்ள ரயில்நிலையங்கள் ஆகியன குறித்த விவரங்கள் அட்டவணையில் இடம் பெறும்.
இந்த அட்டவணை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படும். அதில் உள்ள நேர மாற்றங்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
ஆனால் மத்தியில் இந்த ஆண்டு பதவியேற்ற புதிய அரசு ஜூலை மாதம்தான் முதல் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதனால் ரயில்வே கால அட்டவணை வெளியிடுவது ஆகஸ்ட் மாத இறுதிக்கு தள்ளி வைப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
அதனடிப்படையில் இன்று தென் மண்டலங்களுக்கான ரயில்வே கால அட்டவணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை விநாயகர் சதுர்த்தி, அடுத்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் இன்று அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளது என்று ரயில்வே அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
புதிய கால அட்டவணையில் இடம் பெற உள்ள மாற்றங்கள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.