தமிழகத்தில் தொடர் மழை: காற்றாலைகள் மூலம் 1,110 மெகாவாட் மின் உற்பத்தி
சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரம் அடைந்ததால் காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால், அங்குள்ள காற்றாலைகள் மூலம் 1,110 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரம் அடைந்ததால் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்கள்
தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவையாறு உள்பட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை கோடை நடவு செய்யப்பட்ட நெல் மற்றும் உளுந்து, பச்சை பயறு, எள் போன்றவற்றுக்கும் ஏற்றதாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சியில் சாரல்
திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.107 டிகிரி வரை வெயில் கொளுத்திவந்த திருச்சியில் நேற்று அதிகாலை முதலே சாரல் மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்தது.
நிரம்பும் குளங்கள்
புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்தது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக லேசான மழை பெய்தது. அங்குள்ள பழையாற்றில் வெள்ளம் ஓடுவதால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 30 குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளன.
காற்றாலை மின் உற்பத்தி
தென்மாவட்டங்களில் பெய்துவரும் மழையால் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்டு முடிய மூன்று மாதங்களில் காற்று அதிகம் வீசுவதால் அதிகபட்ச மின்சாரத்தை காற்றாலைகள் உற்பத்தி செய்கின்றன. இதனால் இந்த மூன்று மாதங்களையும் ‘‘பீக் லோட்'' மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீசன் தொடங்கும் முன்பே
இந்த மாதங்களில் சராசரியாக 3,500 முதல் 4 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்வது வழக்கம். மற்ற மாதங்களில் காற்றாலைகள் இரட்டை இலக்கம் அல்லது மின்சாரமே உற்பத்தி செய்யாமல் கிடப்பில் கிடக்கும். தற்போது பீக்லோட் மாதம் தொடங்கப்படாத நிலையில், காற்றாலைகள் சீசன் தொடங்குவதற்கு முன்பாக காற்றாலைகள் மின்சார உற்பத்தியை தொடங்கின.
காற்றாலைகள்
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, முப்பந்தல் மற்றும் தூத்துக்குடி, கயத்தாறு, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள காற்றாலை மின்உற்பத்தி நிலையங்கள் முக்கிய பங்கை வகித்து வருகிறது.
மின் உற்பத்தியை தொடங்கின
கன்னியாகுமரி கடல்பகுதியில் மையம் கொண்டுள்ள குறைந்த அழுத்த தாழ்வு பகுதியால் இந்தப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வீசும் காற்றால் காற்றாலைகள் செயல்பட தொடங்கின.
1110 மெகாவாட் மின்சாரம்
கடந்த வாரங்களில் மின்சாரமே தயாரிக்காமலும், இரட்டை இலக்கங்களிலும் மின்சாரம் தயாரித்து வந்த காற்றாலைகள், கடந்த 5-ந்தேதி இரவு 7.05 மணிக்கு 772 மெகாவாட்டும், நேற்று அதிகாலை 1.50 மணிக்கு 32 மெகாவாட்டும், நேற்று காலை 7.50 மணிக்கு 306 மெகாவாட் உட்பட 1,110 மெகாவாட் மின்சாரத்தை கடந்த 2 நாட்களில் காற்றாலைகள் உற்பத்தி செய்து இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.
உற்பத்தி அதிகரிக்கும்
மின்வினியோகத்தில் பற்றாக்குறை இருந்த நிலையில் காற்றாலைகள் தற்போது கைகொடுத்துள்ளன. மேலும் அடுத்த 48 மணிநேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மண்டலம் தெரிவித்துள்ளது. இதனால் காற்றாலைகள் மூலம் மேலும் அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.