சென்னையில் பலத்த காற்றுடன் திடீர் மழை
சென்னை: சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இன்று மாலையில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது.
கடந்த சிலநாட்களாகவே சென்னையில் புழுக்கம் அதிகமாக இருந்து வந்தது. பகலில் நல்ல வெயிலும், இரவில் புழுக்கமும் மக்களை வாட்டி வதைத்து வந்தது. கூடவே கொசுத் தொல்லையும் கடுப்படித்து வருகிறது.
மழை வருவது போல இருந்தாலும் மழை வரவில்லை. மாறாக நல்ல காற்றுதான் வீசி வருகிறது. இதனால் புழுதி பறக்கும் நகரமாக மாறியிருந்தது சென்னை.
இந்த நிலையில் இன்று மாலையில் சென்னையின் பல பகுதிகளிலும், புறநகர்கள் சிலவற்றிலும் திடீரென காற்றுடன் மழை பெய்தது. பலத்த காற்று வீசிய நிலையில் வானம் இருட்டிக் கொண்டு வந்து மழையும் கூடவே வந்ததால் மக்கள் மகிழ்ந்தனர்.
அதேசமயம், இந்த மழை பலத்த மழையாக இல்லாமல் மிதமாக பெய்து வருவதால் கண்டிப்பாக இரவு புழுக்கம் தாறுமாறாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏதோ ஒன்றுமில்லாமல் இருந்ததற்கு இது பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு சின்னதாக பெய்துள்ள இந்த மழை மக்களை கொஞ்சம் போல சந்தோஷிக்க வைத்துள்ளது.