வெப்ப சலனம்– வழிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழ்நாட்டில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில் இரவில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், அரபிக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வால் குமரி கடல் வழி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும் உள்மாவட்டங்களிலும் அனேக இடங்களில் மழை பெய்யும்.
குமரி கடல் பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலும் மழை அதிகம் பெய்யும். நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் மழை எதிர்பார்க்கலாம்.
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி பேச்சிப்பாறையில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. வால்பாறை, குளச்சலில் 5 செ.மீ., முதுகுளத்தூர், ஓமலூரில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.