குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை... இன்றும் மழை பெய்யும்!
சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டிருப்பதாலும், வெப்பச் சலனம் காரணமாகவும் இன்றும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் நேற்றிரவு 9 மணியளவில் திடீரென சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்தது.
இடி, மின்னலுடன் கிட்டதட்ட 1 மணி நேரத்திற்கும் அதிகமாக பெய்த இந்த மழையால் நகரின் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
முறிந்து விழுந்த மரங்கள்:
காற்று பலமாக வீசியதால் சாந்தோம், அடையார், வடபழனி, எம்ஜிஆர் நகர், அம்பத்தூர் உள்பட நகரில் பல பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
விமானங்கள் தவிப்பு:
சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் 30 நிமிட நேரம் தரை இறங்கவும், புறப்பட்டு செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டது.
காற்றும், மழையும்:
ஹைதராபாத், கொல்கத்தா, பெங்களூர் நகரங்களில் இருந்து வந்த 3 விமானங்கள் தரை இறங்க முடியாமல் தவித்தன. சுமார் 30 நிமிட நேரம் விமானங்கள் வானில் வட்டமிட்டன. காற்றும், மழையும் குறைந்த பிறகுதான் தரை இறங்கியது.
பாதிக்கப்பட்ட போக்குவரத்து:
பேருந்து நிலையத்திற்கு வந்து சென்ற பயணிகள் பலத்த மழையின் காரணமாக கடும் அவதிப்பட்டனர். பஸ் நிலையம் அருகே தண்ணீர் தேங்கி கிடந்ததால் பேருந்து போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மின்தடையால் அவதி:
இடி, மின்னலுடன் காற்று பலமாக வீசிக்கொண்டே இருந்ததால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் கொசுகடியில் மக்கள் தூக்கமின்றி தவித்தனர்.
மற்ற இடங்களிலும் மழை:
சென்னையை போல் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்பட பல மாவட்டங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்துள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு நிலை:
இந்த நிலையில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இரவு நேரத்தில் மழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு:
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது சிறு தூறல்களுடன் மழை பெய்யும். இரவில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.