சங்கரன்கோவிலில் திடீர் மழை.. காரணம் ஜெயலலிதாவா இல்லை ரமணனா..??
சங்கரன்கோவில்: முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை சங்கரன்கோவிலில் பிரசாரம் செய்ய உள்ள நிலையில் கொளுத்தும் வெயிலில் தகித்து வந்த மக்களைக் குளிர்விக்கும் வகையில் கால் மணி நேரம் சாரல் மழை பெய்ததால், அம்மா வருகையால்தான் மழை வந்ததாக மக்கள் குளிர்ந்து போய் விட்டனராம்.
சங்கரன்கோவிலில் இன்று பிற்பகலில் முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார். சங்கரன்கோவில் -தளவாய்புரம் மெயின் ரோட்டில் ஒரு தனியார் பள்ளி மைதானத்தில் முதல்வரின் பிரசாரம் நடக்கவுள்ளது.
இந்த நிலையில் இன்று பிற்பகல் இரண்டரை மணி வாக்கில் திடீரென சாரல் மழை பெய்தது. சுமார் கால் மணி நேரம் பெய்த இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.,
காரணம் பல நாட்களாகவே இப்பகுதியில் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் மழை வந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அம்மா வருவதால்தான் முன்கூட்டியே மழை வந்து விட்டதாக அங்குள்ள அதிமுகவினர் கொளுத்திப் போட மக்களும் அப்படியும் இருக்கலாமோ என்று ஆச்சரியப்படத் தொடங்கி விட்டனர்.
ஆனால்.. ரமணன்தான் காரணம்
இருப்பினும் இந்த திடீர் மழைக்கு உண்மையான காரணம் நமம ரமணன்தான். வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் லேசான மழையை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
சரி இப்பச் சொல்லுங்க மழைக்குக் காரணம் ஜெயலலிதாவா இல்லை ரமணனா...??