தமிழகத்திலும் மிக விரைவில் அரசியல் மாற்றம் வரும்: வைகோ
சங்கரன்கோவில்: தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தனது கலிங்கப்பட்டி கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு காலை 9.40 மணிக்கு, கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரும் தனது தம்பியுமான வை.இரவிச்சந்திரன், தனது மகன் துரை வையாபுரி மற்றும் குடும்பத்தினருடன் வந்து வரிசையில் நின்ற தலைவர் வைகோ அவர்கள், 10.10 மணிக்கு வாக்களித்தார்.
வாக்களித்துவிட்டு வெளியே வந்த தலைவர் வைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"உலகத்தின் தலைசிறந்த ஜனநாயக நாடுகளில் ஒன்று இந்தியா. 16ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான இந்த வாக்குப் பதிவு, இன்று தமிழகத்தில் நடைபெறுகிறது. 5 கோடியே 37 இலட்சத்து 33 ஆயிரம் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்குப் பதிவு செய்கிறார்கள்.
மகிழ்ச்சியாக ஓட்டு போட்டேன்
நான் என்னுடைய பிறந்த ஊராகிய கலிங்கப்பட்டியில் வாக்காளனாக இருக்கிறேன். இந்த முறை அதிக மகிழ்ச்சியோடு ஓட்டுப்போடுவதற்குக் காரணம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் சின்னமாகிய பம்பரம் சின்னத்திலேயே ஓட்டுப்போடுகிற வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.
பம்பரம் சின்னத்திற்கு
கூட்டணி அமைந்த காலங்களில் இந்தத் தொகுதியில் மறுமலர்ச்சி தி.மு.க.வுக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று டாக்டர் சதன் திருமலைக்குமாருக்கு பம்பரம் சின்னத்தில் ஒட்டுப்போட்ட வாய்ப்பை மனதுக்கு மகிழ்ச்சியான வாய்ப்பாகவே நான் கருதுகிறேன்.
அமைதியான தேர்தல்
தமிழகத்தில் இந்தத் தேர்தல் பதட்டம் இல்லாமல், எங்கும் எந்தக் கலவரமும் இல்லாமல் அசம்பாவத சம்பவங்கள் இல்லாமல் அமைதியாக நடைபெற்றுக்கொண்டிருப்பதற்கு பொதுமக்களுக்கும் அனைத்துக் கட்சித் தொண்டர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
நேர்மைக்கு வெற்றி
பணத்தின் ஆதிக்கம் செல்லுபடியாகாது என்பதில் மக்கள் தீர்மானமாக இருக்கிறார்கள்.
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கக்கூடிய புதிய வாக்காளர்கள், வாக்குரிமை இல்லாத படிக்கின்ற என் தம்பிகள், தங்கைகள் எனது பேரப் பிள்ளைகள் தங்களது தாய் தந்தையரிடம், உலக நடப்புகள் முதற்கொண்டு ஜெனீவா முதல் முல்லைப் பெரியாறு பிரச்சினை வரை அனைத்து பிரச்சினைகளையும், ஊழலினுடைய கொடுமையையும் எடுத்துக்கூறி, ஓட்டுக்குப் பணம் வாங்குவது கேடு என்பதை வீட்டுக்கு வீடு அவர்கள் விளக்கிக் கூறி ஜனநாயகத்துக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்.
கேவலமான செயல்
ஓட்டுக்குக் கொடுக்கும் 500 ரூபாய் என்பது 5 வருடத்துக்கு கணக்குப் பார்த்தால் 27 பைசாதான். இது பொதுமக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது. அதை வைத்து ஒரு பொடி மட்டைகூட வாங்க முடியாது. பிச்சைக்காரர்களுக்குகூட ஒரு ரூபாய் கொடுத்தால் வாங்க மாட்டார்கள். இது மிகவும் கேவலமான செயல்.
வெற்றி நிச்சயம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்தத் தொகுதியில் வெற்றி பெறும். 39 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்பது என்னுடைய கணிப்பு. ஏனெனில் பலமான கூட்டணி அமைந்துள்ளது.
ஊடகங்களுக்கு நன்றி
நான் தொடக்கத்திலிருந்து சொல்லிக்கொண்டு வருவதுபோல், திமுக, அதிமுக என்ற ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது இந்தத் தேர்தலில்தான். தமிழ்நாட்டின் எதிர்காலத்தில் விடிவு ஏற்படுவதற்கு இந்தத் தேர்தல் முடிவுகள் நிச்சயமாக இருக்கும். அதில் ஊடகங்கள், பத்திரிகைகளுக்கும் பங்கு இருக்கிறது.
அரசியல் மாற்றம் வரும்
தமிழக அரசியலில் 1972க்குப் பின்பு, திமுக அல்லது அதிமுகவுக்கு என்று மாறி மாறி ஓட்டுப்போடும் நிலை இந்தத் தேர்தலில் மாறியுள்ளது. இந்தத் தேர்தல் முடிந்த பின்பு தமிழகத்தில் மிக வேகமான முறையில் அரசியல் மாற்றம் வரும் சூழ்நிலை தானாக அமையும். என்றார் வைகோ.