ரஜினி - மோடி சந்திப்பு எதார்த்தமானது.. ப.சிதம்பரம்
காரைக்குடி: ரஜினிகாந்த், மோடி சந்திப்பு எதார்த்தமானதே. இதை விசேஷமாக பார்க்கத் தேவையில்லை என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த சந்திப்பு எதார்ததமானது. அதை அரசியல் பார்வையில் பார்க்கத் தேவையில்லை. விசேஷமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்றார் சிதம்பரம்.
முன்னதாக தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து மானாமதுரை ஒன்றியம் மேலநெட்டூர், தெற்கு சந்தனூர் குடியிருப்பு, வேதியரேந்தல், ராஜகம்பீரம் ஆகிய இடங்களில் ப.சிதம்பரம் பிரச்சாரம் செய்து பேசுகையில், மத்தியில் திமுக, அதிமுகவால் ஆட்சி அமைக்க முடியாது. அவர்களது எல்லை தமிழ்நாடு மட்டும் தான்.
2016-ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கு அந்தக் கட்சிகள் ஒத்திகை பார்க்கின்றன. தேசிய கட்சிகளோடு இந்தக் கட்சிகளுக்கு கூட்டணி இருந்தால்தான் தேசியக் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கும்போது மாநிலக் கட்சிகளால் அதில் பங்கேற்க முடியும்.
இந்தியாவை 50 ஆண்டு காலம் ஆண்ட காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் தகுதி உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலைத் திட்டம், கல்விக்கடன் திட்டம், விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டத்தை ஏன் 5 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்த பா.ஜ.க. கொண்டு வரவில்லை. அவர்களுக்கு சிறுபான்மை சமுதாயத்தைப் பற்றி கவலை கிடையாது.
நாட்டில் உள்ள 10 சதவீத மேட்டுக்குடி மக்களைப் பற்றித்தான் பா.ஜ.க.வுக்கு அக்கறை உண்டு. தமிழ்ச் சமுதாயம் மீது அக்கறை கொண்டது காங்கிரஸ் அரசு, அதனால்தான் நாட்டில் அதிமாக வாழும் தலித், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் கொண்டுவந்த திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தப்படும்.
ஏற்கனவே தென்தமிழக வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை தடுத்துவிட்டார்கள். இட ஒதுக்கீட்டுக் கொள்கை ரத்து செய்யப்படும். பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
தேர்தலில் சிறுபான்மை சமுதாயம் எச்சரிக்கையாக வாக்களிக்க வேண்டும். காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாவிட்டால் பா.ஜ.க. தான் ஆட்சி அமைக்கும். அப்போது காஷ்மீர் ரத்தக்களரியாக மாறும். மதச்சார்பின்மை சிதைக்கப்படும். அனைத்து துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ் ஆட்கள் நுழைந்து விடுவார்கள்.
இந்தக் கட்சி ஆட்சி அமைத்துவிட்டால் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை அப்புறப்படுத்துவது கடினம். எனவே காங்கிரஸ், பா.ஜ.க.வை ஒப்பிட்டுப் பார்த்து தேர்தலில் மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்றார் அவர்.