ஆளுங்கட்சியின் ஆதரவோடு மணல் கடத்தல்... காவலர் படுகொலைக்கு ராமதாஸ் கண்டனம்
சென்னை: மணல் கடத்தும் கும்பலுக்கு ஆளுங்கட்சியின் ஆதரவு இருப்பதாலேயே, தடுக்க நினைத்த காவலரை கொல்லும் அளவுக்கு துணிச்சல் வந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற கனகராஜ் என்ற காவலர் டிராக்டர் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டார்.
காவலரின் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அதிர்ச்சி...
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் கொசஸ்தலை ஆற்றிலிருந்து மணல் கடத்தப்படுவதை தடுக்க முயன்ற கனகராஜ் என்ற காவலரை மணல் கடத்தல் கும்பல் டிராக்டர் ஏற்றி படுகொலை செய்திருக்கிறது. இது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. கொல்லப்பட்ட காவலரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல் முறையல்ல...
மணல் கொள்ளையை தடுக்க முயலும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல் முறையல்ல.
மணல் அள்ள விதிமுறைகள்...
பாலாற்றில் மணல் கொள்ளையை தடுக்க பா.ம.க.வின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கீ.லோ. இளவழகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மணல் அள்ளுவதற்காக சில விதிமுறைகளை வகுத்தது. ஆனால், அனைத்து விதிகளையும் காற்றில் பறக்கவிட்டு மணல் என்னும் இயற்கை வளத்தை கொள்ளையர்கள் சூறையாடிக் கொண்டிருகின்றனர்.
ஆளுங்கட்சி துணை...
மணல் கடத்தலுக்கு ஆளுங்கட்சி நிர்வாகிகளும், காவல்துறை அதிகாரிகளும் துணையாக இருப்பதால் தான் காவலரையே கொலை செய்யும் அளவுக்கு கடத்தல் கும்பலுக்கு துணிச்சல் ஏற்பட்டிருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் மட்டுமின்றி, காவிரி பாசன மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் இதே நிலை தான் காணப்படுகிறது. காவிரி பாசன மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து கேரளத்துக்கும், வட மாவட்டங்களிலிருந்து ஆந்திரம் மற்றும் கர்நாடகத்திற்கும் மணல் கடத்தப்படுகிறது.
அரசின் அலட்சியம்...
உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் எத்தனை முறை கண்டனம் தெரிவித்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மணல் கொள்ளைக்கு அரசு எந்திரங்கள் துணை போகின்றன. காவலர் கனகராஜ் கொல்லப்பட்டு 24 மணி நேரத்திற்கு மேலாகியும் அதற்கு காரணமான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பதிலிருந்தே மணல் கடத்தலை தடுப்பதிலும், அதற்காக பாடுபடுபவர்களை பாதுகாப்பதிலும் அரசும் காவல்துறையும் எவ்வளவு அக்கறை காட்டுகின்றன? என்பதை அறியலாம்.
நடவடிக்கை தேவை...
இயற்கை வளத்தைக் காக்க வேண்டியது அரசின் கடமை என உச்சநீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியுள்ளது. அதை மதித்து பாலாறு உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மணல் கொள்ளையை தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவலர் கனகராஜை கொலை செய்தவர்களை கைது செய்து கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.