ராமநாதபுரம் அருகே சப்-இன்ஸ்பெக்டருக்கு சரமாரி அரிவாள் வெட்டு - காது துண்டானது!
ராமநாதபுரம்: தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் நேற்று காவலர்கள் இருவர் குற்றவாளிகளால் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசார் அடித்து துன்புறுத்துவதாக அவ்வப்போது, சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதைப் பார்த்திருப்போம். ஆனால், குற்றத்தைத் தட்டிக் கேட்ட போலீசார் தாக்குதலுக்கு ஆளாகும் போது இவர்கள் மீது அதிக அளவில் வெளிச்சம் படுவதில்லை.
போலீஸ் உடை அணிந்தாலே அவர்கள் மனிதர்கள் இல்லை என இவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்களா என்றும் தெரியவில்லை. சில நேரங்களில் போலீஸார், கிரிமினல்களிடம் சிக்கி மிகக் கொடூரமான தாக்குதலுக்குள்ளாகி விடுகிறார்கள்.
திருப்புலானி தாக்குதல்:
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புலானி காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணி புரிந்து வருபவர் செல்லப்பாண்டி. உச்சிப்புளியில் வசித்து வரும் இவர் நேற்று பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லப்பாண்டியை வழி மறித்த ஆசாமி ஒருவர், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
காது துண்டான நிலையில் முகம், முதுகு என பலத்த வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அலறித் துடித்த செல்லப்பாண்டியை அக்கம்பக்கத்தார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
‘தன்னை தாக்கியது காராண் கிராமத்தை சேர்ந்த கருப்பையா' என போலீசில் தெரிவித்துள்ளார் செல்லப்பாண்டி. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் கருப்பையாவைக் கைது செய்துள்ளனர்.
வேலூர் சம்பவம்:
இதேபோல், வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வரும் சீதாராமன் என்பவர் நேற்று பணியில் இருந்தபோது கத்தி குத்து தாக்குதலுக்கு ஆளானார். வழிப்பறி கொள்ளையரான ஜான்பால் என்பவர் இந்த கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
ஜான்பாலின் வாகனத்தை நிறுத்தி அதில் சீதாராமன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது, மறைத்து வைத்திருந்த கத்தியால் சீதாராமனை சரமாரியாக வெட்டிய ஜான்பால், சீதாராமனின் காரில் தப்பிச் சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து அப்துல்லாபுரம் நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில், கொள்ளையனை கைது செய்யப்பட்டதோடு, காரையும் கைப்பற்றினர்.
தாக்குதலில் காயமடைந்த சீதாராமனுக்கு, வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அச்சம்:
நேற்று ஒரே நாளில் இருவேறு சம்பவங்களில் போலீசார் குற்றவாளிகளால் தாக்கப் பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றத்தைத் தட்டிக் கேட்கும் அதிகாரம் கொண்ட போலீசாருக்கே இந்த நிலை என்றால், தங்களின் நிலை என்ன என்ற அச்சத்தில் பொதுமக்கள் ஆழ்ந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளியை கொடூரமாக தாக்கினார்கள், என்கவுண்டர் செய்தார்கள் என போலீசார் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசும் சிலர், இது போன்று போலீசார் தாக்குதலுக்கு ஆளாகும் போது மவுனம் சாதிப்பது ஏன்? போலீசாரின் உயிர் மட்டும் அலட்சியப் படுத்தப் படுவதா...? இத்தகைய சம்பவங்கள் மனித உரிமை மீறலில் வராதா..?
போலீசாரும் மனிதர்கள் தான். மற்றவர்களைப் போலவே அவர்களுக்கும் குடும்பம் உள்ளது. அவர்களை நம்பியும் பலர் வாழ்ந்து வருகிறார்கள், அவர்களுக்கும் அடித்தால் வலிக்கும் என்பதை மக்கள் உணர வேண்டும்.
இது மனித உரிமை மீறல் இல்லையா..?
ஆனால், இதையெல்லாம் புறந்தள்ளி விட்டு, குற்றவாளிகளுக்காகப் போராடும் பலர், இவர்களைக் கண்டு கொள்வதில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், நெல்லை அருகே ரோட்டில் வெட்டப்பட்டுக் கிடந்த போலீஸ்காரரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கக் கூட யாரும் முன்வரவில்லை என்பது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல், மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற போது எத்தனை போலீஸ்காரர்கள் பரிதாபமாக உயிரை இழந்திருக்கிறார்கள். இனியாவது சமூகம் விழித்துக் கொள்ளுமா? உயிர் என்பது எல்லாருக்கும் பொதுவானது தான்.
லட்சியம், குடும்பம், சம்பளம் என எத்தனையோ காரணங்களுக்காக போலீஸ் பணியில் சேர்பவர்கள், இப்படி காரணம் இல்லாமல் குற்றவாளிகளின் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழப்பது நாட்டின் சட்ட ஒழுங்கிற்கு, பாதுகாப்பிற்கு அழகா என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.