ராமேஸ்வரம் மீனவர்களின் கச்சத்தீவில் தஞ்சம் கோரும் போராட்டம் வாபஸ்!
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் நடத்த இருந்த கச்சத்தீவில் தஞ்சம் புகும் போராட்டம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் வாக்குறுதியை ஏற்று கைவிடப்பட்டது.
இலங்கை கடற்படையால் கால் நூற்றாண்டுகாலத்துக்கும் மேலாக தமிழக மீனவர் சொல்லொண்ணா துயரை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் மீனவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது.
இலங்கை கடற்படையின் படுகொலைகள், கைது நடவடிக்கைகள், மீன்பிடி படகுகள் பறிமுதலுக்கு கண்டனம் தெரிவித்து கடந்தமாதம் 24 ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தங்களது விசைப்படகுகளில் வெள்ளைக் கொடி கட்டி கச்சத்தீவுக்குச் சென்று இலங்கை கடற்படையிடம் தஞ்சம் புகும் போராட்டம் நடத்தப் போவதாகவும் மீனவர்கள் அறிவித்தனர். ஆனால் தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால் கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கை ராணுவம் எச்சரிக்கை விடுவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று காலை திட்டமிட்டபடி மீனவர்களும், அவர்களது குடும்ப பெண்களும் கச்சத்தீவு போராட்டத்திற்காக திரண்டனர். இதனால் ராமேஸ்வரத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.
ராமேஸ்வரம் வேர்கோடு பகுதியில் இருந்து வௌ்ளைக்கொடி ஏந்தி கச்சத்தீவு நோக்கி செல்லும் போராட்டத்தை இன்று காலை மீனவர்கள் தொடங்கினர். அப்போது மீனவர் சங்க பிரநிதிகளிடம் செல்போனில் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷணன், 10 நாட்களில் இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி மொழி அளித்தார்.
இந்த வாக்குறுதியை ஏற்று மீனவர்கள் கச்சத்தீவில் தஞ்சம் கோரும் போராட்டத்தைக் கைவிட்டனர். அதே நேரத்தில் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்று மீனவர்கள் அறிவித்துள்ளனர்.